ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா
இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்கா களமிறங்கினால் மத்திய கிழக்கில் அமைந்துள்ள அவர்களின் இராணுவத் தளங்கள் தாக்கப்படும் என ஈரான் மிரட்டல் விடுத்திருந்தது.
அனைத்து விமானங்களும்
இந்த நிலையில், கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த டசின் கணக்கான போர் விமானங்கள் தற்போது அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
ஈரானின் மிரட்டலுக்கு பயந்து ட்ரம்ப் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கக் கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜூன் 5 முதல் 19 வரை, அல் உதெய்த் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கிட்டத்தட்ட அனைத்து விமானங்களும் தற்போது மாயமாகியுள்ளதாக வெளியான செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜூன் 5 ஆம் திகதி முதல் ஹெர்குலஸ் சி-130 போன்ற போக்குவரத்து விமானங்கள் மற்றும் உளவு விமானங்கள் உட்பட கிட்டத்தட்ட 40 இராணுவ விமானங்கள் அல் உதெய்த் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 19 ஆம் திகதி பதிவான புகைப்படத்தில் வெறும் 3 விமானங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, மிகுந்த எச்சரிக்கையுடனும், பிராந்தியத்தில் நடந்து வரும் மோதல் போக்கு காரணமாகவும், தளத்தை அணுகுவது மட்டுப்படுத்தப்படும் என்று கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை அறிவித்திருந்தது.
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள்
அத்துடன் அங்குள்ள பணியாளர்கள் அதிக விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனிடையே, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாகத் தாக்குதல்களில் இணைவதா இல்லையா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்வார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் தனது முடிவை அறிவித்ததன் பின்னர் அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்குவதன் மூலம் ஈரான் பதிலளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதல்களுக்குப் பிறகு மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் அணிதிரட்டப்பட்டுள்ளன.
கூடுதல் விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் போர் விமான இயக்கமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 15 முதல் 18 வரையில் குறைந்தது 27 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பட்டுள்ளது.
இதில் தற்போது 25 விமானங்கள் ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு விமானங்கள் மட்டுமே அமெரிக்கா திரும்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |