ஹைட்டியில் ஆயுதமேந்திய குழுவால் அமெரிக்கர்கள் கடத்தல்!
கரீபியன் நாடான ஹைட்டியில் ஆயுதமேந்திய குழுவால் 17 அமெரிக்கர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைட்டி தலைநகர் Port-au-Prince-ல் வைத்து அமெரிக்க கிறிஸ்தவ மத போதகர்கள், அவர்களின் குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் என 17 பேர் கடத்தப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பெரியவர்கள் 14 பேர், குழந்தைகள் 3 பேர் என மொத்தம் 17 பேர் கடத்தப்பட்டுள்ளதாக ஹைட்டி பாதுகாப்பு படை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
Croix des Bouquets உள்ள அனாதை இல்லத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க கிறிஸ்துவ மத போதகர்கள், அங்கிருந்து Titanyen கிராமத்தை நோக்கி பயணித்திக்கொண்டிருந்த வழியில் ஆயுதமேந்திய குழுவால் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடத்தப்பட்டவர்களை மீட்க ஹைட்டியில் உள்ள அமெரிக்க தூதரகம் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு வெளியுறவுத் துறையின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.