இஸ்ரேல் எதிர்ப்பு... இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்வி: ஹவுதிகள் அழைப்பு
காஸா போர் தொடர்பில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கப்பல்களை தாக்கி வந்த ஈரானிய ஆதரவு ஹவுதிகள் தற்போது அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவ முன்வந்துள்ளனர்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக
இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் மாணவர்கள் போராடி வருகின்றனர். முதன்மையான பல பல்கலைக்கழக வளாகங்களில் கூடாரம் அமைத்து மாணவர்கள் முழு நேர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 2,000 மாணவர்களுக்கும் அதிகமாக கைதாகியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆயுதங்களும் உதவியும் முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஜோ பைடன், காஸா ரத்தக்களரியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மட்டுமின்றி, இஸ்ரேலில் முதலீடு செய்யும் அமெரிக்காவின் முதன்மை பல்கலைக்கழகங்கள் அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மாணவர்கள் கோருகின்றனர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க, பல்கலைக்கழக நிர்வாகங்கள் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.
மட்டுமின்றி, பல்கலைக்கழகங்கள் பல மாணவர்களை இடைநீக்கம் செய்யவும் துவங்கியுள்ளனர். இந்த நிலையில் யேமனில் அமைந்துள்ள சனா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கையில்,
மனிதாபிமான நடவடிக்கை
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பதால் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களை இணைத்துக் கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
சனா பல்கலைக்கழகமானது ஹவுதிகளால் நடத்தப்படுவதாகும். பாலஸ்தீன மக்களுடன் இந்த போரில் அனைத்து வழிகளிலும் தாங்கள் போராடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மாணவர்களின் மனிதாபிமான நடவடிக்கைகளை பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ள சனா நிர்வாகம், அந்த மாணவர்கள் சனா பல்கலையில் தங்கள் கல்வியை தொடரலாம் என்றும் உறுதி அளித்துள்ளனர்.
இதனிடையே, அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஹவுதி படைகளை தீவிரவாத அமைப்பு என்ற பட்டியலில் இந்த ஆண்டு இணைத்துள்ளனர். செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது ஹவுதிகளின் தாக்குதல் அதிகரித்து வந்துள்ள நிலையிலும், சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்படுவதை அடுத்தும் இந்த முடிவுக்கு இரு நாடுகளும் வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |