ஈரானின் அணு நிலையம் மீது அமெரிக்க தாக்குதல்- பதற்றம் அதிகரிப்பு
ஈரானின் தென்மேற்கு Khuzestan மாகாணத்தில் கட்டுமானத்தில் இருந்த Darkhovin அணு மின் நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் அணு ஆற்றல் அமைப்பு (AEOI) வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 19 அதிகாலை 3.39 மணிக்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், இது “ஈரானின் தேசிய சுயாட்சிக்கும், சர்வதேச சட்டத்திற்கும் எதிரான கொடூரமான நடவடிக்கை” எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) கடற்படை, ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க ஆதரவுடன் விதிமீறி சென்றதாகக் கூறப்படும் நான்கு கப்பல்களை தடுத்து நிறுத்தியதாக அறிவித்துள்ளது.
இதில் இரண்டு கப்பல்கள் விபத்துக்குள்ளாகி நிறுத்தப்பட்டன. மற்ற இரண்டு கப்பல்கள் எச்சரிக்கையால் தங்கள் பாதையை மாற்றியதாக IRGC தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை (US Central Command) வெளியிட்ட தகவலின்படி, கடந்த வாரம் மட்டும் ஈரானின் கடற்கரை கண்காணிப்பு, ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் எட்டாவது சுற்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தற்போது மத்திய கிழக்கில் 50,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயர் எச்சரிக்கையில் உள்ளனர். மேலும், ஈரான் இராணுவம், அமெரிக்காவின் Camp Udairi மற்றும் Ali Al Salem விமான தளங்களை ட்ரோன் தாக்குதலால் குறிவைத்ததாகவும் அறிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள், அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழ்நிலையை மோசமாக்கியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |