வெனிசுலாவின் மதுரோவை அடுத்து... ஒரு நாட்டின் ஜனாதிபதியை சிக்கவைக்க அமெரிக்கா தீவிரம்
30 ஆண்டுகளுக்கு முன்பு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக, கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றம் சாட்ட அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுட்டு வீழ்த்தும் திட்டம்
ஒரு பெரும் நடுவர் மன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய இந்த சாத்தியமான குற்றச்சாட்டு, Brothers to the Rescue என்ற மனிதாபிமானக் குழுவால் இயக்கப்பட்ட விமானங்களை கியூபா 1996-ல் சுட்டு வீழ்த்திய கொடூரமான சம்பவம் தொடர்பானது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தற்காலிகப் படகுகளில் கம்யூனிச ஆட்சியில் இருந்து தப்பி ஓடும் கியூபர்களைக் கண்டறியும் நோக்கில் புளோரிடா நீரிணைக்கு மேலே பறந்துகொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், விமானத்தைச் சுட்டு வீழ்த்தும் திட்டத்தையும் அதன் செயலாக்கத்தையும் காஸ்ட்ரோ விவாதிப்பதைக் கேட்கக்கூடிய 12 நிமிட ஒலிப்பதிவு ஒன்று இருப்பதாகக் கூறப்படுகிறது.
விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பான அரசாங்க விசாரணையை மீண்டும் தொடங்குவதாக, புளோரிடாவின் தலைமை சட்டத்தரணி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னர் தெரிவித்திருந்தார்.
தற்போது 94 வயதாகும் ரவுல் காஸ்ட்ரோ கடந்த 2021-ல் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முறைப்படி விலகினார். ஆனால், தற்போதும் அவர் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த ஆளுமைகளில் ஒருவராகப் பரவலாகக் கருதப்படுகிறார்.

ஏற்கனவே, அமெரிக்கா கியூப அரசாங்கத்தின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் வேளையில், இந்தக் குற்றச்சாட்டுப் பதிவு வெளியாகியுள்ளது.
கைப்பற்றவும் திட்டம்
கியூபாவில் பெரும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அத்துடன், அந்த நாட்டை நட்பு ரீதியாகக் கைப்பற்றவும் திட்டமிட்டு வருகிறார்.
இதன் ஒருபகுதியாக கியூபாவிற்கு எண்ணெய் விற்பனை செய்யும் அல்லது விநியோகம் செய்யும் நாடுகள் மீது வரிகள் விதிக்கப்படும் என ட்ரம்ப் நிர்வாகம் மிரட்டல் விடுத்து வருகிறது.

இதனால், எரிபொருள் பற்றாக்குறையால் கியூபா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப், வியாழக்கிழமையன்று காஸ்ட்ரோவின் பேரன் உள்ளிட்ட கியூப அதிகாரிகளைச் சந்தித்துள்ளார்.
மட்டுமின்றி, உளவுத்துறை ஒத்துழைப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் விவாதித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |