ஈரான் - இஸ்ரேல் போரில் ஹிஸ்புல்லா இணைந்தால்..!அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை
ஈரான் - இஸ்ரேல் போரில் ஹிஸ்புல்லா இணைந்தால் பெரும் விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலில், ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இணைந்தால் "மிகவும் மோசமான விளைவுகள்" ஏற்படும் என்று அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஏழு நாட்களாகத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சிரியாவுக்கான அமெரிக்க சிறப்புத் தூதரும், துருக்கிக்கான தூதருமான தாமஸ் பராக், பெய்ரூட்டில் லெபனான் அதிகாரிகளைச் சந்தித்து பேசினார்.
ஹிஸ்புல்லாவின் நெருங்கிய கூட்டாளியான லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பராக், ஈரான் - இஸ்ரேல் மோதலில் ஹிஸ்புல்லா இணைந்தால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு, "இதுகுறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்பாக நான் உறுதியாகக் கூற முடியும். சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் குறிப்பிட்டது போல, இந்தப் போரில் ஹிஸ்புல்லா தலையிடுவது அவர்களுக்கு ஒரு மோசமான முடிவாக இருக்கும்" என்று கூறினார்.
ஹிஸ்புல்லா கண்டனம்
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை ஹிஸ்புல்லா கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், ஈரானின் தலைமைக்கு முழு ஆதரவையும் தெரிவித்தது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஹிஸ்புல்லா எச்சரித்தது.
எனினும், இந்தப் போரில் நேரடியாகத் தலையிடுவது குறித்து ஹிஸ்புல்லா வெளிப்படையான எந்த அச்சுறுத்தலையும் இதுவரை விடுக்கவில்லை.
கடந்த ஆண்டு இஸ்ரேலுடனான போரில் ஹிஸ்புல்லா பெரும் இழப்புகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அப் போரில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும், ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லா போராளிகளும் உயிரிழந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |