'உங்கள் அனுமதி தேவையில்லை' இந்திய எல்லைக்குள் நுழைந்த போர்க் கப்பல் குறித்து அமெரிக்கா விளக்கம்; தொடரும் பதற்ற நிலை
இந்திய கடல் பகுதிக்குள் அமெரிக்க போர்க் கப்பல் நுழைந்தது குறித்து அமெரிக்கா விளக்கம் கொடுத்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் John Paul Jones என்ற போர்க்கப்பல் சமீபத்தில், அரபிக் கடலில், லட்சத்தீவுகளுக்கு மேற்கே 130 கடல் மைல் தொலைவில் உள்ள இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் ஒரு பயிற்சியை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி ஏப்ரல் 7-ஆம் திகதி நடந்ததாகவும், இந்தியாவிடம் முன் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்குள் அனுமதியின்றி, போர்க் கப்பல் வந்ததை கண்டித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் சிறு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையக செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்க போர்க் கப்பல், சர்வதேச கடல் சட்டத்தின்படி, வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டது.
இதற்கு இந்தியாவின் முன் அனுமதி தேவையில்லை. கடல் பகுதியில் எங்களுக்கு உள்ள உரிமை, சுதந்திரம் மற்றும் சட்டத்தின்படியே செயல்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க கடற்படை வெளியிட்ட முந்தைய அறிக்கையில், லட்சத்தீவில் இருந்து, 130 கடல் மைல் தொலைவில் உள்ள, இந்தியாவின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்தில் நுழைய, சர்வதேச கடல் சட்ட ஒப்பந்தப்படி, முன் அனுமதி தேவையில்லை என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
Freedom Of Navigation (போக்குவரத்து சுதந்தரம்) சர்வதேச சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சட்டத்தில் பல நிபந்தனைகள் உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டலப் பகுதியில், அதன் அனுமதியின்றி அந்நிய நாட்டுக் கப்பல் வரலாமா என்பது தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச சட்டத்தின் கீழ் தனக்கு இந்த உரிமை இருப்பதாகவும், ஆனால் இந்தியாவின் கடல்சார் சட்டம் இதை அனுமதிக்கவில்லை என்றும் அமெரிக்கா கூறிவருகிறது.
எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் தன் அனுமதியின்றி இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டலம் வழியாகச் செல்ல முடியாது என்று இந்தியா கூறுகிறது. இதனால், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
