துப்பாக்கியுடன் தன்னை யாரோ துரத்துவதாக கூறி குழந்தையுடன் ஓடி மறைந்த இளம்பெண்: வனப்பகுதியில் பொலிசார் கண்ட காட்சி
அமெரிக்காவில் துப்பாக்கியுடன் தன்னை யாரோ துரத்துவதாக கூறி குழந்தையுடன் ஓடி மறைந்த இளம்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை 8.35 மணியளவில், பெண் ஒருவர், தன்னை யாரோ துப்பாக்கியுடன் துரத்துவதாகக் கூறி வனப்பகுதிக்குள் ஓடியிருக்கிறார்.
அவர் கையில் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்ட அந்த பகுதியிலிருந்தவர்கள், அதுகுறித்து உடனடியாக கலிபோர்னியாவின் Oakland பகுதி பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
புதர் ஒன்றிற்குள் மறைந்திருந்த அந்த பெண்ணைக் கண்டுபிடித்த பொலிசார், அவரது கையில் குழந்தை இல்லை என்பது தெரியவந்ததும் குழந்தையைத் தேடும் முயற்சியில் இறங்கினர்.
அதற்காக 13 பொலிஸ் வாகனங்களில் புறப்பட்ட பொலிசார், மோப்பநாய்கள் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் அப்பகுதியை சல்லடை போட்டுத் தேடத் துவங்கினார்கள்.
சிறிது நேரத்தில் Orion பகுதியிலுள்ள வனப்பகுதியில், நதி ஒன்றின் அருகே முகங்குப்புற கிடந்த நான்கு மாதக் குழந்தையைக் கண்ட பொலிசார் சிலர், ஓடோடிச்சென்று அந்த குழந்தையைத் தூக்கியிருக்கிறார்கள்.
அந்த அணியின் தலைவரான Mike Bouchard என்ற பொலிஸ் அதிகாரி கூறும்போது, குழந்தை குளிரால் hypothermia என்ற பிரச்சினையால் அவதியுற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த பையன் முழுமையாக குணமடைந்துவிடுவான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், அந்த குழந்தையின் தாய் கூறிய விடயங்களில் உண்மை இருப்பதுபோல் தெரியவில்லை என்று கூறியுள்ள பொலிசார், அவர் அனுமதிக்கப்பட்ட மருந்துப்பொருள் எதையோ போதைப்பொருள் போல பயன்படுத்தியிருக்கலாம் என கருதுகிறார்கள்.
குழந்தையை அபாயகரமான நிலையில் வனப்பகுதியில் அவர் விட்டுவந்ததால், அந்த 37 வயது பெண் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

