இளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை செலுத்திய அமெரிக்க ஜானாதிபதிகள்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் வாழ்ந்துவரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் அனைவரும் பிரித்தானிய இளவரசர் பிலிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் தமது 99-வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார்.
அவரது கடைசி ஆசைக்கு இணங்க அரசு மரியாதையை தவிர்த்து, இராணுவ மரியாதையுடன் 41 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் 8 பேருடன், மேலும் சில நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட முன்னாள் ஜானதிபதிகள் என வாழ்ந்துவரும் அமெரிக்க ஜனாதிபதிகள் அனைவரும் பிரித்தானிய இளவரசர் பிலிப்புக்கு மரியாதை செலுத்தி தங்கள் இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இளவரசர் பிலிப்பின் வாழ்நாளில் சுமார் 18 அமெரிக்க ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதில், 12 அமெரிக்க அதிபர்களை இளவரசர் பிலிப், அவரது மனைவி இரண்டாம் எலிசபெத் ராணியுடன் சேர்ந்து சந்தித்துள்ளார்.
தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனாதிபதிகளான ஜோ பைடன், டொனால்டு டிரம்ப், பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் மற்றும் ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் இளவரசர் பிலிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
அதிபர் ஜோ பைடன் தனது அறிக்கையில், இளவரசர் பிலிப் பிரித்தானியாவுக்கும் காமன்வெல்த்துக்கும் ஆற்றிய சேவை நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடியது, அவர் 99 வயதிலும் சோர்வடைந்ததே இல்லை என்றும் அவரை வியந்து போற்றுவதாகவும் கூறியுள்ளார்.
முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இளவரசர் பிலிப்பின் மரணம் கிரேட் பிரிட்டனுக்கும், அவரது அன்புக்குரிய அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று விவரித்தார்.
2016-ஆம் ஆண்டு இளவரசர் பிலிப்பை சந்தித்த பராக் ஒபாமா, அவரது இழப்பு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், அவர் ஒரு கூர்மையான புத்திசாலி மற்றும் நகைச்சுவை உணர்வுடையவர் என பாராட்டினார்.
பில் கிளிண்டன் வெளியிட்ட அறிக்கையில் பல ஆண்டுகளாக நாங்கள் அவருடன் சந்திக்க வேண்டிய ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் அனுபவித்தோம், அவர் எங்களுக்கு காட்டிய கருணைக்கு எப்போதும் ஆழ்ந்த நன்றியுடன் இருப்போம் என்று கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் மிக வயதான முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 1977-ல் இளவரசர் பிலிப் மற்றும் ராணியுடன் உணவருந்தினார். 96 வயதான அவர் தனது ட்வீட்டில் "எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப் காலமானார் என்பதைக் கேட்டு நாங்கள் வருந்துகிறோம்" என் குறிப்பிட்டுள்ளார்.
ஜார்ஜ் புஷ் தனது இரங்கல் அறிக்கையில், இளவரசர் பிலிப் "தனது நீண்ட மற்றும் குறிப்பிடத்தக்க வாழ்நாள் முழுவதும், தகுதியான காரணங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்தார். அவர் ஐக்கிய இராச்சியத்தை கண்ணியத்துடன் பிரதிநிதித்துவப்படுத்தினார், மேலும் இறையாண்மைக்கு எல்லையற்ற வலிமையையும் ஆதரவையும் கொண்டு வந்தார்" என கூறியுள்ளார்.