நகர மக்களின் மொத்த தரவுகளையும் தவறவிட்ட நபர்: சிக்கிக்கொண்ட நகர நிர்வாகம்
ஜப்பானிய நகரம் ஒன்றின் குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட தரவைக் கொண்ட யூ.எஸ்.பி-யை ஒப்பந்ததாரர் ஒருவர் தவறவிட்ட சம்பவம் அந்த நகர நிர்வாகத்திற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானிய நகரமான Amagasaki-ன் 460,000 குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட தரவுகள் கொண்ட யூ.எஸ்.பி தான் தற்போது மாயமாகியுள்ளது.
40 வயது கடந்த அந்த ஒப்பந்ததாரர் பணி நேரத்திற்கு பின்னர் மதுபான விடுதியில் மது அருந்த சென்றுள்ளார். சம்பவம் நடந்த செவ்வாய்க்கிழமை இரவு உள்ளூர் உணவகத்தில் பல மணிநேரம் குடித்துக்கொண்டிருந்த அந்த நபர் அதிக போதையில் தெருவிலேயே படுத்துத் தூங்கியுள்ளார்.
ஆனால் ஒருகட்டத்தில் கண் விழித்த அவர், தாம் வைத்திருந்த பையை தவறவிட்டதாக புரிந்து கொண்டுள்ளார். அந்த பையில் தான் Amagasaki நகரின் 460,000 குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட தரவுகள் கொண்ட யூ.எஸ்.பி இருந்துள்ளது.
குறித்த தகவலை ஒருவழியாக நகர நிர்வாகத்திடம் தெரிவித்த அந்த நபர், மன்னிப்பும் கோரியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ள நகர நிர்வாகம், பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளது.
குறித்த தரவுகளில் குடிமக்களின் பெயர், பாலினம், பிறந்த திகதிகள், தனிப்பட்ட தகவல்கள், முகவரி, வரி செலுத்திய தரவுகள், வங்கி கணக்கு உள்ளிட்ட முக்கிய தரவுகள் அனைத்தும் பகிரப்பட்டுள்ளது.
ஆனால், குறித்த தரவுகள் அனைத்தும் கடவுச்சொல்லால் பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த யூ.எஸ்.பி இனி எவர் கைகளில் சிக்கினாலும், அந்த தரவுகளை பயன்படுத்த முடியாது என நகர நிர்வாகம் நம்பிக்கை அளித்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.