மிகப்பெரிய கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சியடைந்தேன்! என் கிரிக்கெட் வாழ்வில்... மனம் திறந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி
நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கும் போது பவுலராக ஆரம்பிக்கவில்லை எனவும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாகத் தான் துவங்கினேன் எனவும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது தனது சிறப்பான பந்து வீச்சின் மூலமாக உலகின் பல முன்னணி வீரர்களை வீழ்த்தினார்.
இதன் காரணமாக அவர் அவுஸ்திரேலியா சென்ற இந்திய அணியின் டி20 தொடருக்கான அணியில் இடம் பிடித்தார். ஆனால் காயம் காரணமாக அந்த தொடரை தவறவிட்ட வருண் சக்ரவர்த்திக்கு இரண்டாவது வாய்ப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டி20 தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போதும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாமல் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இப்படி தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளையும் தவறவிட்ட வருண் சக்கரவர்த்திக்கு மூன்றாவதாக இலங்கை சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைத்தது. டி20 தொடரில் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் பேட்ஸ்மேன்களை ரன் குவிக்க விடாமல் சிக்கனமாக பந்துவீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
விரைவில் தொடங்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வருண் தேர்வாவார் என்று கூறப்படுகிறது. அவர் அளித்த பேட்டியில், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய கனவு. அந்த கனவு நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். முதல் டி20 போட்டியில் நான் விளையாடுவதற்கு முன்பு தினேஷ் கார்த்திக் இடம் சில ஆலோசனைகளை பெற்று அவர் கொடுத்த ஆலோசனைகளின் படி பந்துவீசினேன். அவர் கொடுத்த ஆலோசனைகள் என்னை சிறப்பாக செயல்பட வைத்தது.
நான் எனது கிரிக்கெட் வாழ்வை துவங்கும்போது பவுலராக ஆரம்பிக்கவில்லை. விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாகத்தான் துவங்கினேன்,பிறகு எனக்கு ஏற்பட்ட சில காயம் காரணமாக நான் சுழற்பந்து வீச்சாளராக மாறினேன் தெரிவித்துள்ளார்.