வெனிசுலா நிலநடுக்கம்... குறைந்தது 50,000 பேர் இறந்திருக்கலாம் என்று அச்சம்
வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களில் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் வாய்ப்பு நேற்று இரவு முடிவடைந்த நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் பல்லாயிரக்கணக்கானோர் மரணமடைந்திருக்கலாம் என மீட்புக் குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இனி வாய்ப்புகள் குறைவு
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதன்கிழமை மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், சுமார் 1,500 பேர் மரணமடைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; அதேவேளையில், குறைந்தது 50,000 பேரைக் காணவில்லை என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மீட்புக் குழுவினர் நேற்று இடிபாடுகளுக்குள் இருந்து மக்களைத் தொடர்ந்து மீட்டனர்; இதில் உயிர் பிழைத்த ஒரு பச்சிளம் குழந்தையும் அடங்கும்.
ஆனால் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் செய்தி ஊடகத்திடம் தெரிவிக்கையில், நிலநடுக்கத்திற்குப் பிந்தைய முதல் 48 முதல் 72 மணிநேர காலத்தை, இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருப்பவர்களைச் சென்றடைவதற்கான 'பொற்காலம்' என்று நாங்கள் கருதுகிறோம்.
அதன் பிறகு தண்ணீர் இல்லாமல் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் வேகமாக குறைந்துவிடுகின்றன என்றார். தற்போது வெனிசுலாவில் உலகெங்கிலும் இருந்து 2000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
புதன்கிழமை மாலை 6 மணிக்குச் சற்றுப் பிறகு, சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் வெனிசுலாவை உலுக்கின. முதலில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 36 வினாடிகள் கழித்து 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நூற்றாண்டில் வெனிசுலாவைத் தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கமாகும். இடிந்து விழுந்த வணிக வளாகங்கள் மற்றும் தொகுப்பு குடியிருப்பு கட்டிடங்களின் கோரமான படங்கள் வெளியாகியுள்ளன. மேலும், காயமடைந்தவர்களால் தாங்கள் திணறி வருவதாக உள்ளூர் மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் கராகஸுக்கு வடக்கே உள்ள லா குவைரா கடலோரப் பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது; அங்கு தொடரும் நில அதிர்வுகளுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானோர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
100,000 வரை இருக்கலாம்
கராகஸில் குறைந்தது 1,600 கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. கட்டிடங்களும், பாலங்கள் மற்றும் சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளும் நொடிகளில் சரிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சோசலிசத் தலைவர் நிக்கோலஸ் மதுரோவை இரவு நேரத் தாக்குதலில் கைது செய்ததிலிருந்து வெனிசுலா கொந்தளிப்பில் உள்ளது.
பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக அவர் நியூயார்க்கில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்க மீட்புக் குழுக்களையும் 150 மில்லியன் டொலர் நிதியுதவியையும் வெனிசுலாவிற்கு அளித்துள்ளார்.

இந்த நிலையில், வெனிசுலாவில் இறுதி இறப்பு எண்ணிக்கை 10,000 முதல் 100,000 வரை இருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்னும் 50,000 பேர் காணாமல் போயுள்ளனர். வெனிசுலாவுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |