வெனிசுலா நிலநடுக்கம்... ஆறு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட மூன்று வயதுக் குழந்தை
வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவுமிக்க நிலநடுக்கங்களுக்குப் பிறகு, மூன்று வயதுக் குழந்தை ஒன்று ஆறு நாட்கள் கழித்து இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
நம்பிக்கைக்குரிய தருணம்
லா குவைரா மாகாணத்தில் இடிபாடுகளிலிருந்து, கிளிபர் மோரன் என்ற அந்தக் குழந்தை மீட்கப்பட்டபோது, மீட்புப் பணியாளர்கள் ஆரவாரம் செய்தனர். அந்தக் குழந்தையை மீட்டதை நம்பிக்கைக்குரிய ஒரு தருணமாக நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் அவசரமாகத் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
கடந்த வாரம் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கங்களால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,943-ஆக உயர்ந்துள்ளது; மேலும் 10,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
நாசாவின் செயற்கைக்கோள் தரவுகள் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், அந்தப் பெரும் நிலநடுக்கங்கள் 58,870 கட்டிடங்களைச் சேதப்படுத்தியிருக்கலாம் அல்லது அழித்திருக்கலாம் என தெரிய வருகிறது.
ஜோர்டானிய மீட்புக் குழுவால் மீட்கப்பட்டுள்ள அந்தக் குழந்தை முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
லா குவைரா கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்; அங்குள்ள பல உள்ளூர் மக்கள் தாங்களாகவே மீட்புப் பணிகளை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

லா குவைராவில் உணவுப் பற்றாக்குறை பரவலாக உள்ளதாகவும், அடிப்படைச் சேவைகள் முடங்கியுள்ளதாகவும், தகவல் தொடர்பு பெருமளவில் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.வின் அகதிகள் முகமை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
தொடர்ந்து தேடுதல் பணி
இதற்கிடையில், சுகாதார சேவைகள் தீவிர நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கிளிபரை மீட்ட நிகழ்வு, உயிருடன் இருப்பவர்களைத் தொடர்ந்து கண்டெடுப்பதற்கான நம்பிக்கை இன்னும் உள்ளது என்பதைக் காட்டுவதாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேசக் குழுக்கள் இடிபாடுகளுக்கு இடையே தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் டசின் கணக்கான பிற நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மீட்புக் குழுக்கள், பயிற்சி பெற்ற நாய்கள் மற்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றன.
இதற்கிடையில், இதுவரை கண்டெடுக்கப்பட்ட மரணமடைந்தவர்களின் உடல்களை வெனிசுலா மக்கள் அடக்கம் செய்யத் தொடங்கியுள்ளனர். மரணமடைந்திருக்கலாம் எனக் கருதப்படும் தங்கள் உறவினர்களின் உடல்களுக்காக இன்னும் பலர் காத்திருக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |