இலங்கை அணியின் வெற்றிக்கு இவர் ஒருவரே காரணம்! நம்பர் 1 இடத்தை பிடிப்பது உறுதி: பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கையின் வெற்றிக்கு வஹிண்டு ஹசரங்கா ஒரு முக்கிய காரணம் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 81 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து ஆடிய இலங்கை அணி இலக்கை அசால்ட்டாக எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சுழற்பந்து வீச்சாளரான வஹிண்டு ஹசரங்கா பார்க்கப்படுகிறார்.
நான்கு ஓவர் வீசிய இவர், 9 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன் காரணமாகவே இந்திய அணியால் அதிக ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை.
அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே ஹசரங்கா சிறப்பாக செயல்பட்டார்.
இதனால் அவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடரவிருக்கும் ஐபிஎல் தொடரில் மாற்று வீரராக எடுக்க சில அணிகள் முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.