ஐரோப்பா முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகளில் குளிர் காய்ச்சல் பரவல் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தொற்றின் வீரியம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் சுகாதாரத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கொரோனா பரவலும், கூடவே குளிர் காய்ச்சல் பாதிப்பும் இக்கட்டான நிலைமை உருவாக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு, மாஸ்க் கட்டாயம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் ஐரோப்பாவில் கடந்த குளிர்காலத்தில் காய்ச்சலை கிட்டத்தட்ட ஒழிக்க முடிந்தது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்போது தளர்வான கட்டுப்பாடுகள் காரணமாக மீண்டும் குளிர் காய்ச்சல் பரவல் உக்கிரமடைந்துள்ளதாக ECDC (The European Centre for Disease Prevention and Control) நம்புகிறது. டிசம்பர் மாத இறுதியில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் குளிர் காய்ச்சல் பாதிப்பு ஐரோப்பா முழுவதும் பரவி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வசந்த காலம் முடிவதற்குள் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குதல் நடவடிக்கையால் மே மாதத்திற்கு பிறகும் இந்த இரட்டை தொற்று நீடிக்கும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆர்மீனியா, பெலாரஸ், செர்பியா, பிரான்ஸ், ஜார்ஜியா மற்றும் எஸ்டோனியா ஆகிய ஆறு நாடுகளில் பெருமளவில் குளிர் காய்ச்சல் பாதிப்பு பதிவு செய்யபப்ட்டு வருகிறது.
மற்றும் ஒரு 7 நாடுகளில் குளிர் காய்ச்சல் பாதிப்பு பெருமளவு வியாபித்து வருவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
குளிர் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கைகளின் அடிப்படையில், பிரான்ஸ் மூன்று பகுதிகளில் ஏற்கனவே காய்ச்சல் தொற்றுநோயாக அறிவித்துள்ளன என்று பிரெஞ்சு சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.