நாள்தோறும் 6.30 லட்சம் பேருக்குத் தொற்று... சீனாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த நேர்ந்தால் நாள்தோறும் 6.30 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா தொற்று தொடர்பில் ஆய்வு முன்னெடுத்த கணிதப் பல்கலைக்கழகம், சீனா தற்போது கடைப்பிடித்துவரும் கடும் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் எனவும், சர்வதேச விமான சேவைகளை அனுமதித்தால், மிகப்பெரிய அளவில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நாள்தோறும் 6.30 லட்சம் பேர்கள் வரையில் பாதிக்கப்படலாம் எனவும், நாட்டின் மருத்துவத்துறை இதனால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது.
2019ல் கொரோனா பரவலுக்கு பின்னர் சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் சனிக்கிழமையன்று 23 பேர் மட்டுமே புதிதாகத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து சீனா திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் தொற்றானது, கொரோனா பரவலை கட்டுப்படுத்தப் போராடி வரும் உலக சுகாதார அமைப்பின் செயல்பாட்டுக்கு பெரும் சவாலாக இருக்கக்கூடும் என சீனாவின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஹாங் நான்ஷன் தெரிவித்துள்ளார்.
சீனாவைப் பொறுத்தவரை மொத்த மக்கள்தொகையில் 76.8 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திவிட்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் 80 சதவீத மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வேண்டும் என்பதால் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார் ஹாங் நான்ஷன்.