200 விநாடிகளில் பிரித்தானியாவை அழித்துவிடுவோம்: ரஷ்யா மீண்டும் மிரட்டல்
தனது சாத்தான் 2 ஏவுகணையைக் கொண்டு பிரித்தானியாவை 200 விநாடிகளிலும், பின்லாந்தை 10 விநாடிகளிலும் அழித்துவிடுவோம் என ரஷ்யா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்புக் கமிட்டி ஒன்றின் தலைவரான Aleksey Zhuravlyov என்னும் புடினின் கூட்டாளி, நேட்டோ அமைப்பில் இணைய முயற்சிக்கும் பின்லாந்தை பத்தே விநாடிகளில் ஆணு ஆயுதத்தால் அழித்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
ஏற்கனவே உக்ரைனைக் கைப்பற்ற இயலாமல் திணறிக்கொண்டிருப்பதால் வெறுப்பில் இருக்கும் ரஷ்யாவுக்கு, பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைவதாக கூறுவதும் சேர்ந்து எரிச்சலூட்டியுள்ளது.
இன்று பின்லாந்துக்கு மின்சாரம் வழங்குவதை ரஷ்யா நிறுத்திக்கொண்டுள்ள நிலையில், பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய விரும்புமானால், எங்கள் இலக்கு, நியாயப்படி அந்த நாடே இல்லாமல் செய்வதுதான் என்று கூறியுள்ளார் புடினின் கூட்டாளியான Aleksey Zhuravlyov.
மேலும், அமெரிக்கா எங்களை அச்சுறுத்தினால், உங்களுக்காகவே எங்கள் சாத்தான் 2 ஏவுகணையை வைத்திருக்கிறோம். ரஷ்யா இருக்கக்கூடாது என நீங்கள் நினைத்தால், உங்கள் நாட்டில் அணு ஆயுத சாம்பல் மட்டும்தான் மிஞ்சும் என்றும் கூறியுள்ளார் அவர்.
அத்துடன், ரஷ்யா தனது அணு ஆயுதங்களை பின்லாந்து எல்லைக்கருகில் கொண்டு செல்லுமா என்று அவரிடம் கேட்டதற்கு, அது எதற்கு? சைபீரியாவிலிருந்து சாத்தான் 2 ஏவுகணையை ஏவினால் அது பிரித்தானியாவையே சென்றடைந்துவிடும். 200 விநாடிகளில் பிரித்தானியாவும், 20 ஏன் பத்தே விநாடிகளில் பின்லாந்தும் தாக்கப்பட்டுவிடும் என்றும் கூறியுள்ளார் Aleksey Zhuravlyov.