ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள்... வெளியான விரிவான தகவல்
காஸா பகுதியில் இஸ்ரேல் முப்படை தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், தற்போதைய சூழல் இன்னும் இறுகும் என்றே கூறப்படுகிறது.
மூன்றாவது பெரிய முப்படை தாக்குதல்
இஸ்ரேல் காஸா பகுதியில் முப்படை தாக்குதலை முன்னெடுத்தால், வடக்கில் ஈரானிய ஆதரவு லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா களத்தில் குதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என கூறுகின்றனர்.
@getty
மேலும், 2005க்கு பின்னர் காஸா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் மூன்றாவது பெரிய முப்படை தாக்குதல் இதுவாகும். இஸ்ரேல் ராணுவத்திற்கு பல காலமாக அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. ஆண்டுக்கு 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் அளித்து வருகிறது.
அத்துடன் ஏவுகணை தொடர்பான தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்த இன்னொரு 500 மில்லியன் டொலர் தொகையும் அமெரிக்கா செலவிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலேயே ஆயுத பலம் வாய்ந்த நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று.
அமெரிக்க ஆதரவு நாடு என்பதால் இஸ்ரேல் அதிநவீன ஆயுதங்களை குவித்து வைத்துள்ளது. இஸ்ரேலில் பொதுவாக 170,000 துருப்புக்கள் எப்போதும் செயலில் இருப்பார்கள். அத்துடன், ஹமாஸ் படைகளுக்கு எதிரான போருக்கு என 360,000 துருப்புகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
கொரில்லா போர் தந்திரங்கள்
ஆனால் ஹமாஸ் படைகளுக்காக பில்லியன் டொலர் தொகையை செலவிட எந்த நாடும் முன்வராது என்பதால், இஸ்ரேல் அளவுக்கு அவர்களிடம் ஆயுதக் குவியல் ஏதும் இல்லை. 2007ல் இருந்தே ஹமாஸ் அபடைகள் காஸா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
@getty
ஆனால் ஹமாஸ் படைகளின் சமீபத்திய நகர்வுகள், கண்டிப்பாக இஸ்ரேல் படைகளுக்கு சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இஸ்ரேல் தரைவழி தாக்குதலை முன்னெடுக்கும் என்றால், ஹமாஸ் கொரில்லா போர் தந்திரங்களை பயன்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
ஹமாஸ் படைகளிடம் மொத்தமாக 15,000 முதல் 20,000 வீரர்களே உள்ளனர். ஆனால் இஸ்ரேல் தரப்பு வெளியிட்டுள்ள தகவலில், 30,000 வீரர்கள் ஹமாஸ் படையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஹமாஸ் தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை குவித்து வைத்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் தொடங்கிய பின்னர் இதுவரை 5,000 ஏவுகணைகளை ஹமாஸ் வீசியுள்ளது.
இஸ்ரேலுக்கு கடும் நெருக்கடி
ஹமாஸ் படை சுமார் 30,000 ஏவுகணைகளை குவித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் தரப்பு கூறுகிறது. மேலும், இலக்குகளை சரியாக தாக்கும் ஏவுகணைகள் அவை எனவும் நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.
@reuters
இதனிடையே, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் பிற போராளிக் குழுக்களிடம் சுமார் 150,000 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் இருப்பதாக அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவும் துல்லியமாக இலக்கை தாக்கும் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஹிஸ்புல்லாவும் களமிறங்கினால், அது இஸ்ரேலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது மட்டுமின்றி,
வெளிப்படையாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் போரில் குதிக்கும் வாய்ப்புகளும் அதிகம் என்றே நிபுணர்கள் தரப்பு கணிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |