வெயில் வாட்டினால் என்ன... நாங்களே மழை வரவைப்போம்: தொழில்நுட்பம் மூலம் சாதித்துக்காட்டியுள்ள நாடு
வெயில் வாட்டினால் என்ன, நாங்களே மழை வரவைப்போம் என தொழில்நுட்பம் மூலம் சாதித்துக்காட்டியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம். ஒரு பக்கம் சில நாடுகள் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்க, மறுபக்கம் பாலைவன நாடுகள் வெயிலால் தவித்து வருகின்றன.
ஆனால், வெயில் அடித்தால் என்ன, நாங்களே எங்கள் நாட்டுக்கு மழையை உருவாக்கிக்கொள்வோம் என களமிறங்கிய அமீரகம், மேகங்களுக்குள் பறந்து மின்னோட்டத்தை ஏற்படுத்தி மழையை வரவழைக்கும் ட்ரோன்கள் மூலம் தான் சொன்னதை சாதித்துக்காட்டியுள்ளது.
122 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் வாட்டி வதைக்கும் அமீரகத்தில் மழை கொட்டித்தீர்க்கும் காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதாவது, ட்ரோன்களை பறக்கவிட்டு, மேகங்களுக்கு மின்சார ஷாக் கொடுத்து அவற்றை ஓரிடத்தில் குவித்து மழை வரச் செய்யப்படுகிறது.
வெளியாகியுள்ள வீடியோவில், மழை பெய்வது மட்டுமின்றி, வறண்ட நாடான அமீரகத்தில், சாலைகளில் வாகனங்கள் செல்ல தடுமாறுமளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.