இளவரசர் பிலிப்பின் நல்லடக்கம் எப்போது? யார் யார் கலந்து கொள்வார்கள்: வெளிவரும் தகவல்
பிரித்தானிய பொதுமக்களின் பங்களிப்பின்றி, எதிர்வரும் சனிக்கிழமை இளவரசர் பிலிப்பின் நல்லடக்கம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் தமது 99வது வயதில் காலமானார்.
அவரது கடைசி ஆசைக்கு இணங்க அரசு மரியாதையை தவிர்த்து, இராணுவ மரியாதையுடன் 41 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
இளவரசர் ஹரி- மேகன் தம்பதி உட்பட இதுவரை நான்கு அரச குடும்பத்து திருமணங்கள் முன்னெடுக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக இளவரசர் பிலிப்பின் உடல் வின்ட்சர் கோட்டையில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களுக்கு விலக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் அதிகபட்சமாக 30 பேர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் 8 பேர்களுடன், மேலும் சில நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.
இளவரசர் வில்லியம்- கேட் தம்பதி, இளவரசர் எட்வார்ட்- சோஃபி தம்பதி, இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி, ராணியார் இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசி ஆன் ஆகியோர் கண்டிப்பாக கலந்துகொள்பவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள்.
ஆனால், அமெரிக்காவில் தங்கியிருக்கும் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி அந்த 30 பேர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
இளவரசர் பிலிப்பின் மறைவை அடுத்து 8 நாட்கள் துக்கமனுசரிக்கப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படும்.
இளவரசர் பிலிப்பின் தனிப்பட்ட விருப்பத்தை ஏற்று அரசு மரியாதை தவிர்க்கப்படும் எனவும், மாறாக இளவரசர் பிலிப் கடற்படையில் பணியாற்றியவர் என்பதால் இராணுவ மரியாதை அளிக்கப்படும் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.