Gen Z தலைமுறையினர் மிகவும் துயரப்படும் நாடு எது... பிரித்தானியாவிற்கு எந்த இடம்
ஜென் Z தலைமுறையினர் மிகவும் துயரத்தில் இருக்கும் நாடுகள் தொடர்பான ஒரு புதிய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளதில் பிரித்தானியாவுக்கு அதில் எந்த இடமென்பதும் தெரிய வந்துள்ளது.
குவைத் இளையோர்கள்
ஆக்ஸ்போர்டு ஸ்கொலாஸ்டிகா அகாடமியின் ஆராய்ச்சியாளர்கள், 100 நாடுகளைச் சேர்ந்த 1,400-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளைப் பற்றிக் கணக்கெடுத்தனர்.
ருவாண்டா, துருக்கி, பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் வசிக்கும் இளைஞர்களைக் காட்டிலும், குவைத்தில் வசிக்கும் இளையோர்கள் எதிர்காலம் குறித்து மிகக் குறைந்த நம்பிக்கையுடன் இருப்பதாக ஆய்வின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இதற்கு மாறாக, கென்யா, நேபாளம் மற்றும் கஜகஸ்தானை விட இலங்கையில்தான் Gen Z தலைமுறையினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், கவலைப்படுவதற்கும் அவநம்பிக்கை கொள்வதற்கும் காரணங்கள் இருக்கின்றன என கூறும் ஆக்ஸ்போர்டு ஸ்கொலாஸ்டிகா அகாடமியின் இணை இயக்குநரான Lavinia Abell, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, போர், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பலவாக இருக்கலாம் என்றார்.
வேலைவாய்ப்பு உலகில் நுழையும்போது சவால்களை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு இது குறிப்பாகக் கவலைக்குரியதாக இருக்கும். இந்த நிச்சயமற்ற தன்மைகள் குறித்து ஒவ்வொரு நாட்டவர்களின் மனப்பான்மை என்ன என்பதைத்தான் இந்த ஆய்வு முன்னிலைப்படுத்துகிறது என்றார்.
இந்த ஆய்வின் மூலம், தங்கள் தனிப்பட்ட எதிர்காலம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், அரசியல் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்காலம் குறித்து Gen Z தலைமுறையினர் எந்தளவுக்கு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அக்குழு முயன்றது.
உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 1,433 மாணவர்கள், இந்த ஐந்து வகைகளிலும் தங்கள் நம்பிக்கையை 1 முதல் 5 வரையிலான அளவுகோலில் மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இலங்கை முதலிடம்
குறைந்தது ஐந்து மாணவர் பதிலளித்தவர்களைக் கொண்ட நாடுகளை (மொத்தம் 41 நாடுகள்) அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது; இதற்கான ஒட்டுமொத்த மதிப்பெண்கள், அனைத்து ஐந்து பிரிவுகளிலும் உள்ள சராசரியைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக, 4.32 என்ற அசத்தலான மதிப்பெண்ணுடன், Gen Z தலைமுறையினரின் நம்பிக்கையில் இலங்கை பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

இந்த ஆய்வில் பங்கேற்ற நாடுகளில், சுற்றுச்சூழல் மீதான அதிகபட்ச நம்பிக்கை மதிப்பெண் (4.62) மற்றும் வலுவான தனிப்பட்ட நம்பிக்கை (4.75) கொண்டுள்ள இளைஞர்கள் அதிக அளவில் நம்பிக்கையை வெளிப்படுத்துவதால், இலங்கை இந்த ஆய்வில் முன்னிலை வகிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.
சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பொருளாதாரச் சீர்குலைவுகள் இருந்தபோதிலும், இலங்கை மாணவர்கள் தங்கள் சமூகத்தின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.
இரண்டாமிடத்தில் கென்யாவும், மூன்றாமிடத்தில் நேபாளமும் இடம்பெற்றுள்ளது. மேற்கத்திய நாடுகளில், கனடா ஆறாவது இடத்தில் (4.08) உள்ளது, அமெரிக்காவை (3.99) விட முன்னிலையில் உள்ளது.
பிரித்தானியா 3.61 என்ற ஒட்டுமொத்தப் புள்ளிகளுடன், 41 நாடுகளில் 33வது இடத்தைப் பிடித்துள்ளது. பிரித்தானிய மாணவர்கள் அரசியல் நம்பிக்கையில் வெறும் 3.04 புள்ளிகளையும், சுற்றுச்சூழல் நம்பிக்கையில் 3.06 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
இது இவ்விரு பிரிவுகளிலும் பிரித்தானியாவை கடைசி மூன்றில் ஒரு பங்கில் வைக்கிறது. இந்தோனேசியாவில் வசிக்கும் இளைஞர்களே மிகச் சிறப்பாக வாழ்ந்து வருவதாகவும், அவர்களைத் தொடர்ந்து இஸ்ரேல், பிலிப்பைன்ஸ் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, அமெரிக்கா பட்டியலில் 12-வது இடத்தைப் பிடித்தது; அதேவேளையில், பிரித்தானியா 22 நாடுகளில் 20-வது இடத்தைப் பிடித்து மோசமான நிலையை வெளிப்படுத்தியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |