ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் தாலிபான் உச்ச தலைவர்! செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா வெளியிட்ட முக்கிய தகவல்
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகும், இன்னும் உச்சபட்ச தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸடா பொது வெளியில் தோன்றாமல் இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாலிபான் பயங்கரவாத குழுவின் தற்போதைய உச்சசபட்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடா (Hibatullah Akhundzada). விசுவாசிகளின் தளபதி (Commander of the Faithful) என்று அழைக்கப்படும் ஹிபத்துல்லா, 2016-ஆம் ஆண்டு மே மாதம் தாலிபான்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தாலிபான்களின் இரண்டாவது தேந்தெடுக்கப்பட்ட தலைவரான முல்லா அக்தர் மன்சூர் (Mullah Akhtar Mansour) 2015-ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தால் ஆளில்லா விமான தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட பிறகு, தாலிபான்களின் மூன்றாவது தலைவராக ஹிபத்துல்லா அகுந்த்ஸடா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், ஹிபத்துல்லா இதுவரை ஒருமுறை கூட பொதுவெளியில் தனது தோற்றத்தை வெளிப்பத்தியது இல்லை. இதுவரை அவரது ஒரே ஒரு புகைப்படம் மட்டும் தாலிபான்களால் வெளியிடப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் திகதி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய பிறகு, காபூலில் பல தாலிபான் பிரமுகர்கள் நுழைந்துள்ளனர். தலைவர் ஹிபத்துல்லா இன்னும் பொதுவெளியில் தோன்றவில்லை என்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், முன்னதாக ஹிபத்துல்லா அகுந்த்ஸடா பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் கோவிட் தொற்று அல்லது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவிவந்தன. இந்த வதந்திகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இது குறித்து தாலிபான் செய்தி தொடர்பாளரான ஜபிஹுல்லா முஜாஹித்திடம் கேளிவி எழுப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "கடவுளின் விருப்பப்படி நீங்கள் அவரை விரைவில் பார்ப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மண்ணில் வெளிநாட்டுத் துருப்புக்கள் இருக்கும் வரை "தாலிபான்கள் தங்களை ஜிஹாத் நிலையில் கருதுகின்றனர்" மற்றும் அவர்கள் வெளியேறும் வரை தங்கள் தலைவரை மறைத்து வைத்திருப்பார்கள் என்று பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வாளர் இம்தியாஸ் குல் (Imtiaz Gul) கூறியுள்ளார்.