உண்மையை சொல்லுங்கள்... முதன்முறையாக சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கிடுக்கிப்பிடி
கொரோனா வைரஸ் சீன ஆய்வகம் ஒன்றிலிருந்து வெளிப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அமெரிக்கா முதல் பல்வேறு நாடுகளுக்கு இருக்கும் நிலையில், உலக சுகாதார அமைப்பு மட்டும் அந்த கூற்றுக்கு ஆதரவாக பேசவேயில்லை.
சொல்லப்போனால், கொரோனா வைரஸ் சீன ஆய்வகம் ஒன்றிலிருந்து வெளிப்பட்டதா என்பதை ஆராயச் சென்ற குழு அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்றே கூறிவிட்டது.
ஆனாலும், அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, உண்மையை அறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அதற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பு உட்பட பலரும் கொஞ்சம் மாற்றி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
உலக சுகாதார அமைப்பின் சார்பில், கொரோனா சீன ஆய்கத்திலிருந்து பரவியதா என்பதை ஆராயச் சென்றவரான பிரித்தானிய அறிவியலாளரான Peter Daszak என்பவர், சீனாவுக்கு சென்றுவிட்டு, கொரோனா வைரஸ், வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியதாக கூறப்படுவது உண்மையல்ல என்கிற ரீதியில் ஒரு அறிக்கை தயார் செய்து, அவருடன் சென்ற 27 அறிவியலாளர்களையும் அதில் கையெழுத்திடச் செய்தார்.
ஆனால், அவருக்கும் வுஹான் ஆய்வக தலைமை ஆய்வாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, Peter Daszak அந்த அமைப்பிலிருந்தே நீக்கப்பட்டார்.
இந்நிலையில்தான், முதன்முறையாக உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ராஸ் அதானம் கொஞ்சம் கீழிறங்கி வந்திருக்கிறார். நானும் ஆய்வகத்தில் வேலை செய்தவன்தான், ஆய்வகத்தில் தவறுகள் நடப்பது சகஜம், ஆகவே உண்மையை சொல்லுங்கள், என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள் என முதன்முறையாக சீனாவைக் கேட்டுள்ளார் அவர்.
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் வெளியேறியது என்ற முடிவுக்கு இவ்வளவு சீக்கிரம் வரமுடியாது என்று அவர் கூறினாலும், அறிவியலாளர்கள் அது எங்கிருந்து உருவானது என்பதைக் கண்டறியும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் நிலையில், சீனா இன்னும் அதிக வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவேண்டும் என உலக சுகாதார அமைப்பு சீனாவை வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்தான், சீனா விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறிய டெட்ராஸ் அதானம், இறந்தவர்கள் மீதான மரியாதை நிமித்தமாவது கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது குறித்த உண்மையைக் கண்டுபிடிக்க சீனா உதவவேண்டும் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.