ஆப்கானிஸ்தானின் பிரதமர் ஆகும் இந்த தாலிபான் தலைவர் யார் தெரியுமா? வெளிவரும் முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் பிரதமராக பதவியேற்கவுள்ள முல்லா ஹசன் அகுந்த் பற்றி, பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 15-ஆம் திகதி ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், அதன் பின் 31-ஆம் திகதி வரை அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கு காலக்கெடு கொடுத்தனர்.
அதன் படி கடந்த 30-ஆம் திகதி நள்ளிரவே அமெரிக்காவின் கடைசி படை வீரர் ஆப்கானிஸ்தானின், காபூல் நகரை விட்டு வெளியேறும் புகைப்படங்கள் வெளியாகின.
இதையடுத்து தற்போது ஆப்கானிஸ்தானி, புதிய அரசை அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், தாலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதர் புதிதாக அமையும் அரசின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானை மையமாக கொண்ட ஹக்கானி வலைக்குழுவுக்கும் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையிலான அதிகார போட்டி காரணமாக புதிய அரசு அமைவதில் காலதாமதம் நிலவி வந்தது.
இந்நிலையில் தலிபான்கள் நேற்று முன்தினம் புதிய இடைக்கால அரசை அறிவித்தனர். அதில், பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். முல்லா அப்துல் கனி பரதருக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசின் பதவியேற்பு விழா எப்போது நடைபெறும், தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் எவ்வளவு காலம் பதவியில் இருப்பார்கள் போன்ற விவரங்களை தலிபான்கள் தெரிவிக்கவில்லை.
ஆனால், இந்த பதவியேற்பு விழாவிற்கு ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற ஆறு நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுந்த் முந்தைய தலிபான்கள், அதாவது 1996-2001ஆட்சியில் சக்தி வாய்ந்த தலைவராக இருந்து வந்துள்ளார். அப்போதைய தாலிபான்கள் ஆட்சியில் இவர், துணை பிரதமராகவும் வெளியுறவு மந்திரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
முல்லா ஓமருடன் சேர்ந்து தலிபான் அமைப்பை நிறுவியவர்களில் இவரும் ஒருவராவார். இவர் முல்லா ஓமருக்கு மிகவும் நெருக்கமானவர்.
கடந்த 2001-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் இருந்த உலகப் புகழ் பெற்ற புத்தர் சிலையை குண்டு வைத்து தகர்க்க மூலகாரணமாக இருந்தவரும் இவர் தான்,
இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முல்லா ஹசன் அகுந்தை தனது பயங்கரவாத தடுப்பு பட்டியலில் சேர்த்தது. இப்போதும் ஐ.நா. தடைப்பட்டியலில் அவரது பெயர் உள்ளது.
தாலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பின்பு, ஒரு முறையான ஷரியத் சட்டப்படி ஆட்சி நடைபெறும், பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்படும் என்றெல்லாம் கூறினர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, அவர்களின் அறிவிப்பு, நடவடிக்கை எல்லாம் அப்படியே மாறி வருவது, அங்கிருக்கும் மக்களுக்கு பெரும் பயத்தை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.