ரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதி யார்?: புடின் இல்லாத அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை துவங்கிய மூத்த ரஷ்ய அதிகாரிகள்
ரஷ்யாவில், புடினுடைய இடத்தைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்த தீவிர விவாதங்கள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புடின் இல்லாத ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை, ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் தீட்டி வருவதாக கூறப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் மீது போர் துவங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், கிரெம்ளின் அதிகாரிகள், மற்றும் ரஷ்ய செல்வந்தர்களில் ஒருவருக்குக் கூட புடின் மீது திருப்தி இல்லை என ரஷ்ய அரசு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் Meduza என்னும் ஊடக இணையதளத்திடம் தெரிவித்தார்.
போர் துவக்கினால் தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து கொஞ்சம் கூட யோசிக்காமல் புடின் உக்ரைனை ஊடுருவியதில், ரஷ்ய தொழிலதிபர்களுக்கோ அரசில் பொறுப்பு வகிப்பவர்களுக்கோ, யாருக்கும் விருப்பமில்லை என அந்த நபர் கூறியுள்ளார்.
தடைகளுடன் வாழ்க்கை நடத்துவது சாத்தியமே இல்லை என அந்த அரசு அலுவலர் குறிப்பிட்டுள்ள நிலையில், அவரது கருத்தை மேலும் இரண்டு அரசு அலுவலர்கள் ஆமோதித்துள்ளார்கள்.
போரால் ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இப்போதே கண்கூடாகத் தெரிவதாக கூறும் அந்த அலுவலர், கோடையின் மையத்தில், மேலும் பல திசைகளிலிருந்து பிரச்சினைகள் வரும் என்கிறார். அதாவது, போக்குவரத்து, மருந்துகள், ஏன் விவசாயத்துக்குக் கூட பிரச்சினை ஏற்படும் என்கிறார். இந்த அளவுக்கு பிரச்சினைகள் மோசமாகும் என யாரும் நினைக்கவில்லை என்கிறார், ரஷ்ய அரசுக்கு நெருக்கமான அந்த அலுவலர்.
ஆக, உக்ரைன் போர் விடயத்தில் புடின் சொதப்பி விட்டார் என ரஷ்ய உளவுத்துறையினர் நினைக்கிறார்கள், தொழிலதிபர்களும், ரஷ்ய செல்வந்தர்களும் தடைகள் குறித்து வருத்தமடைந்துள்ளார்கள், அதிகாரிகளுக்கு புடின் மீது திருப்தியில்லை.
எனவே, புடினுக்கு பதிலாக ரஷ்யாவை வழிநடத்தப்போவது யார் என்பது குறித்து மூத்த ரஷ்ய அதிகாரிகள் விவாதிக்கத் துவங்கிவிட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில், புடினைக் கொல்ல முயற்சி நடந்ததாகவும், அதிலிருந்து தப்பிய அவர் தன்னுடைய அதிகாரிகள் மீது நம்பிக்கையிழந்துள்ளதால், அவர்கள் தன்னைக் கொல்ல முயற்சிக்கக்கூடும் என அஞ்சி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் ஒருபடி மேலே போய், ரஷ்ய வரலாற்றிலேயே முதல் முறையாக, உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா செய்வது சகித்துக்கொள்ளக்கூடியதாக இல்லை என்றும், தன் நாட்டைக் குறித்து தன் அவமானமாக கருதுவதாகவும் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான ரஷ்ய தூதரக அலுவலரான Boris Bondarev (41) என்பவர் ராஜினாமா செய்துள்ள விடயம், உலக அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.