அச்சுறுத்தும் 'Mu' வகை கொரோனா வைரஸ் - தீவிரமாக கண்காணித்துவரும் உலக சுகாதார அமைப்பு
'ம்யூ' (Mu) என்ற புதிய வகை கொரோனா வைரஸை கண்காணித்துவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இந்தாண்டு ஜனவரியில் முதல்முறையாக கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸான Mu-வை கண்காணித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
முதல்முறையாக கொலம்பியாவில் கண்டறியப்பட்டாலும், பிற தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது ம்யூ வகை கொரோனா தொற்று பரவியுள்ளது.
கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் தேவைப்படும் பட்டியலில் B.1.621 என்ற விஞ்ஞான பெயர் கொண்ட ம்யூ வகையை உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "புதிய மரபியல் மாற்றம் அடைந்த கொரோனா வகை தடுப்பூசியை எதிர்த்து போராடும் திறன் கொண்டுள்ளது. இதை மேலும் புரிந்து கொள்ள அடுத்தடுத்த ஆய்வுகள் தேவை.
மரபியல் மாற்றம் அடைந்த கொரோனா வகைகளின் தொகுதியாக 'ம்யூ' வகை உள்ளது. தடுப்பூசி வெளிப்படும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
அதி தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், புதிய வகை கொரோனா பரவியுள்ளதா என அச்சம் கொள்ளப்படுகிறது.
கோவிட்-19க்கு காரணமான SARS-CoV-2 உள்பட பல வைரஸ்கள் கால போக்கில் மரபியல் மாற்றம் அடைந்துவருகிறது. பெரும்பாலான வைரஸ்களின் பண்புகள் மீது மரபியல் மாற்ற அடைந்த வைரஸ்கள் தாக்கங்கள் ஏற்படுத்தவதில்லை.
ஆனால், எளிதாக பரவுக்கூடும் தன்மை, வைரஸால் ஏற்படும் தீவிர விளைவுகள், தடுப்பூசிக்கு எதிராக தாக்கு பிடிப்பது உள்ளிட்ட பண்புகள் மீது மரபியல் மாற்றம் அடைந்த வைரஸ்கள் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
193 நாடுகளுக்கு பரவியுள்ள ஆல்ஃபா, 41 நாடுகளில் பரவியுள்ள பீட்டா, 170 நாடுகளில் பரவியுள்ள டெல்டா, 91 நாடுகளில் பரவியுள்ள காமா ஆகிய நான்கு வகைகளை கவலை அளிக்கும் வகைகளாக உலக சுகாதார அமைப்பு அடையாளப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ம்யூ உள்பட ஐந்து வகைகளும் கண்காணிக்கப்பட்டுவருகிறது.