மூன்றாவது கொரோனா அலைக்கு மத்தியிலும் பொதுமுடக்கத்தை நெகிழ்த்தியுள்ள ஜேர்மன் நகரம்: காரணம் இதுதானாம்
ஜேர்மனியில் மூன்றாவது கொரோனா அலை தொடங்கியாயிற்று... என்றாலும் ஒரு ஜேர்மன் நகரம் மட்டும் பொதுமுடக்கத்தை நெகிழ்த்தியுள்ளது. தென்மேற்கு ஜேர்மன் நகரமான Tübingenதான் இந்த வித்தியாசமான முடிவை எடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமையிலிருந்து கடைகள், உணவகங்கள், அருங்காட்சியகங்கள் என அனைத்தும் Tübingen நகரத்தில் வழக்கம்போல இயங்கத் தொடங்கிவிட்டன. அதன் பின்னணியிலுள்ள காரணம் என்னவென்றால், அங்கு, பெருமளவில் கூட்டம் கூட்டமாக கொரோனா பரிசோதனை செய்வதை, பொதுமுடக்கத்துக்கு மாற்றாக செயல்படுத்த முடியுமா என்பதை அறிவதற்காக திட்டம் ஒன்று நாட்டிலேயே முதன்முறையாக துவக்கப்பட்டுள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிப்பதற்கு பதிலாக, பெருமளவில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, யாருக்கெல்லாம் பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளதோ, அவர்களை எல்லாம் சகஜமாக பணிக்கு அனுப்ப, கலாசார நிறுவனங்களில் அனுமதிக்க, நடமாட அனுமதிப்பதுதான் இந்த திட்டம். மூன்று வாரங்களுக்கு இப்படி அதிவேக கொரோனா கிட்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்து மக்களை சகஜ வாழ்க்கைக்கு திரும்ப அனுமதித்து, திட்டம் பலனளிக்கிறதா என அறிவியலாளர்கள் கண்காணிக்க இருக்கிறார்கள்.
எதிர்பார்ப்பதற்கு மாறாக மேலும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்தால், இந்த திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4ஆம் திகதி வரை இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளும் அறிவியாலளர்களும் முடிவு செய்துள்ளார்கள்.