ஆபரேஷன் ரைசிங் லயன்; ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - என்ன காரணம்?
ஈரான் தனது ராணுவ வலிமைய உயர்த்தும் நோக்கில், அணுஆயுத தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில், ஈரான் அணுஆயுதம் தயாரிக்க கூடாது என்ற ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
ஆபரேஷன் ரைசிங் லயன்
இந்த நிலையில், இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன்(operation rising lion) என்ற பெயரில், ஈரான் மீது திடீர் தாக்குதலை தொடங்கியுள்ளது. குறிப்பாக ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில், ஈரான் அணு ஆயுத வலிமை பெற்ற நாடாக உருவெடுக்க வாய்ப்புள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையில், இஸ்ரேல் ஈரான் மீது இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
200 விமானங்களை ஏவி, 100 க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் அணு விஞ்ஞானிகள் பலி
மேலும், இந்த தாக்குதலில் ஈரானின் துணை இராணுவப் புரட்சிகரப் படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி மற்றும் உயர் மட்ட அணு விஞ்ஞானிகளான முகமது மெஹ்தி டெஹ்ரான்சி மற்றும் ஃபெரேடூன் அப்பாசி ஆகியோரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், ஈரானும் இதற்கு பதிலடியாக 100 ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளது. இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த தாக்குதலை முறியடித்து வருகிறது.
ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலின் இந்த தாக்குதலை கண்டித்துள்ளன.
ஏற்கனேவே இஸ்ரேல் காசாவில் ஹமாஸ் உடன் போர் நடத்தி வரும் நிலையில், ஈரான் மீது தற்போது தாக்குதலை தொடங்கி மத்திய கிழக்கில் மற்றுமொரு போர் முனையை இஸ்ரேல் திறந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |