2வது தலைநகரை தேடும் ஜப்பான் - என்ன காரணம்?
ஜப்பானில் 2வது தலைநகரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஜப்பான் 2வது தலைநகர்
ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் நேற்று 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.
இந்நிலையில், ஜப்பானில் 2வது தலைநகரை தேர்வு செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சி (LDP) மற்றும் கூட்டணிக் கட்சியான ஜப்பான் இன்னோவேஷன் கட்சி (JIP) உள்ளிட்ட பல கட்சிகளும் இதற்கு ஆதரவளித்தன.
ஜப்பானின் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி, மக்களுக்கான ஜனநாயகக் கட்சி (DPFP), கோமெயிட்டோ, சன்செய்ட்டோ, ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி (JCP) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
2வது தலைநகரம் ஏன்?
தலைநகர் டோக்கியோவில் ஒரு பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டால் நாடு தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் ஆகும்.

டோக்கியோவில் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் ரிக்டர் அளவுகோலில் 7-ஆம் நிலை நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சுமார் 70% வாய்ப்பு இருப்பதாக அரசாங்கம் மதிப்பிடுகிறது.
அப்படி நிகழ்ந்தால், தலைநகரில் உள்ள பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம், மத்திய அமைச்சகங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும்.
மேலும், ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 30% பேர் டோக்கியோவில் வசிக்கின்றனர். உலகளவில் அதிக மக்கள் வசிக்கும் 3வது பெருநகரமாக டோக்கியோ உள்ளது.

ஜப்பானின் பொருளாதார உற்பத்தியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை உருவாக்குவதோடு, பட்டியலிடப்பட்ட ஜப்பானிய நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை கொண்டுள்ளது.
டோக்கியோவில் உள்ள மக்கள் மற்றும் நிறுவன குவிப்பையும் இந்த திட்டம் சரி செய்யும்.
எந்த நகரத்திற்கு வாய்ப்பு?
2ஆம் தலைநகர், டோக்கியோவை தாக்கும் ஒரு பேரிடரால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படுவதற்கான குறைந்த வாய்ப்பை கொண்டிருக்க வேண்டும்.
மேலும், போதுமான அரசாங்க உள்கட்டமைப்பு, பொருளாதார அளவு, மக்கள்தொகை அளவு மற்றும் நிர்வாகத் திறனையும் கொண்டிருக்க வேண்டும்.
எந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்பது குறித்த இறுதி முடிவு பிரதமரிடமே உள்ளது.
ஒசாகா, ஃபுகுவோகா மற்றும் ஐச்சி ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் 2வது தலைநகருக்கான போட்டியில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |