தாலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு... இது தான் எங்கள் நிபந்தனை: முக்கிய ஆசிய நாடு அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி அமைந்துள்ள நிலையில் அதற்கு ஆதரவளிப்பது தொடர்பில் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அசத் மஜீத் கான் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் துப்பாக்கி முனையில் கைப்பற்றினர். தொடர்ந்து செப்டம்பர் 11ம் திகதி பதவியேற்பு விழா முன்னெடுக்கப்பட இருந்த நிலையில், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தம் காரணமாக கைவிடப்பட்டது.
இருப்பினும், பதவியேற்பு விழா இல்லாமலே, ஆட்சியை முன்னெடுக்க இருப்பதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் தாலிபான்களுக்கு எந்தவகையில் ஆதரவளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனையடுத்து, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அசத் மஜீத் கான் விளக்கமளித்துள்ளார். தாலிபான்கள் மனித உரிமை மதிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். அவர்கள் சர்வதேச நாடுகளுக்கு அளித்த வாக்கினைக் காப்பாற்ற வேண்டும்.
தாலிபான்கள் மனித உரிமையைப் பேண வேண்டும், பெண்கள் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். தற்போதைக்கு ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
அதனை சீர் செய்ய வேண்டும். சர்வதேச சமூகம் இந்த வேளையில் ஆப்கானிஸ்தானுடன் எப்படி இணைந்து மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்கலாம் என்றே யோசிக்க வேண்டும்.
ஆதரவு அளிப்பது, புறக்கணிப்பது எல்லாம் பின்னர் யோசிக்க வேண்டியவை.
ஆப்கானிஸ்தானில் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வர வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. அதையேத்தான் நாங்களும் விரும்புகிறோம் என்றார் அசத் மஜீத் கான்.