நானும் அவர்களுடன் இறந்திருக்கலாம்... தந்தையால் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளின் தாயார் உருக்கம்
ஸ்பெயின் நாட்டில் தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இரு பிள்ளைகளின் தாயார், அவர்கள் தொடர்பில் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டை உலுக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார், Tomas Gimeno என்பவரையும் அவரது இளம் வயது மகள் அன்னாவையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை டெனெர்ஃப் கடற்கரையில் 3,000 அடிக்கு மேல் நீருக்கடியில் ஒரு நங்கூரத்துடன் இணைக்கப்பட்ட பையில் அவரது மூத்த மகள் ஒலிவியா(6) உடலைக் கண்டுபிடித்திருந்தனர்.
இந்த நிலையில் இரு பிஞ்சு பிள்ளைகளின் தாயார் Beatriz Zimmerman சமூக ஊடக பக்கத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமது மகள் அன்னாவும் இறந்திருக்கலாம் என்றே சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த இக்கட்டான வேளையில் தமக்கு உதவிய பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், தமது முன்னாள் கணவரின் செயலானது ஒரு நபர் செய்யக்கூடிய மிகக் கொடூரமான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார். தமது பிள்ளைகள் இருவரின் மரணம் கண்டிப்பாக வீணாகாது என குறிப்பிட்டுள்ள அவர்,
நாட்டில் எஞ்சிய குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பு, கல்வி மற்றும் மரியாதைக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார். நான் அவர்களுடன் அந்த துயர நேரத்தில் இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்,
அவர்களின் கைகளைப் பிடித்து, அவர்களுடன் ஒன்றாக இறந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால், இந்த துயரத்தை நான் காலம் முழுக்க அனுபவிக்க வேண்டும் என்றே, தாமஸ் தம்மை உயிருடன் விட்டு வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமஸ் தொடர்பில் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஏப்ரல் 27ம் திகதி தமது மகள்களுடன் மாயமான தாமஸ், இனிமேல் அவர்களை உயிருடன் காண முடியாது என தமது முன்னாள் மனைவியை அச்சுறுத்தி சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.