லண்டனில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்: தோழிக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் தெரிவிக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்
லண்டனில் பட்டப்பகலில் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்ட பெண், தனது முன்னாள் கணவர் குறித்து தனது தோழிக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
திங்கட்கிழமை காலை, Yasmin Wafah Chkaif (43) என்னும் பெண், தனது முன்னாள் கணவரான Leon McCaskre (41) என்பவரால் நடுரோட்டில் கொடூரமாக கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.
Wafahவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து ஆன நிலையிலும், அவர் எப்போதுமே தனது முன்னாள் கணவரைக் குறித்த பயத்திலேயே இருந்ததாக Wafahவின் மகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது கூற்றை நிரூபிக்கும் வகையில், Leon குறித்து Wafah தனது தோழிக்கு அனுப்பிய சில குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
தனது தோழியான Adele-Sara Richards என்பவருக்கு Wafah அனுப்பிய குறுஞ்செய்திகளில், Leon தன் வீடு முழுவதிலும் கமெராக்களை பொருத்தி பல மாதங்களாக தன்னைக் கண்காணித்து வருவதாகவும், நடப்பதை எல்லாம் பதிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் எனது மின்னஞ்சல், மொபைல் முதலான அனைத்து தனிப்பட்ட தரவுகளையும் திருடிவிட்டார். அவர் என்னைக் கொன்றுவிடுவார் என்று நினைக்கிறேன் என்றும் அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Wafahவைக் காப்பாற்றுவதற்காக Leon மீது காரை மோதிய 26 வயது சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தக்கூடாது என்று கோரி உருவாக்கப்பட்டுள்ள மனுவில், சுமார் 9,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள்.
அவரது பெயர் வெளியிடப்படாத நிலையில், அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும், அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், ஒருவரைக் காப்பாற்றச் சென்ற அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகவும், அவரது நண்பரொருவர் தெரிவித்துள்ளார்.