இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண்..இறுதிச்சடங்கில் திடீரென மூச்சுவிட்டதால் பரபரப்பு
அமெரிக்காவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 82 வயது பெண் உயிருடன் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
82 வயது பெண்
கடந்த சனிக்கிழமை அன்று, நியூயார்க்கின் போர்ட் ஜெபர்சனில் உள்ள Water Edge Rehab மற்றும் நர்சிங் மையத்தில் 82 வயது பெண்ணொருவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் நான்கு மைல் தொலைவில் உள்ள மயான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்றதும் அரை மணிநேரம் கழித்து, குறித்த மூதாட்டி சுவாசித்துக் கொண்டிருப்பதை இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஒருவர் கவனித்துள்ளார்.
உயிருடன் இருந்த மூதாட்டி
இது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அப்பெண் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரது நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை என சஃபோல்க் கவுண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தவறான மரண அறிவிப்பை வெளியிட்ட முதியோர் இல்லத்திடம் Eyewitness News ஊடகம் கேள்வி கேட்க முயன்றபோது, அங்கிருந்த ஊழியர்கள் காவல்துறையை அழைப்பதாக அச்சுறுத்தியுள்ளனர்.
மாநில அட்டர்னி ஜெனரல்
எனினும் இந்த சம்பவம் குறித்து மாநிலத்தில் கேள்விகள் எழுந்துள்ளதால், நியூயார்க் மாநில சுகாதாரத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால், தொடர் விசாரணை என்பதால் தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அட்டர்னி ஜெனரல் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கும், அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் இது தேவையற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு மோசமான சூழ்நிலை' என தெரிவித்துள்ளார்.