ஏழு மாத கர்ப்பிணிக்கு மாரடைப்பு... கோமாவில் 10 மாதம்: திடீரென்று கண் விழித்து பேசிய முதல் வார்த்தை
நீண்ட 10 மாத கால கோமாவில் இருந்த இளம் தாயார் ஒருவர் திடீரென்று கண்விழித்து குடும்பத்தினருடன் பேசியுள்ளார்.
இத்தாலியரான 37 வயது கிறிஸ்டினா ரோஸி என்பவர் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார். ஆனால் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனிடையே, அவருக்கு அதே நிலையிலேயே அறுவை சிகிச்சை முறையில் பெண் பிள்ளை ஒன்றும் பிறந்தது. இந்த நிலையில், நீண்ட 10 மாதங்களுக்கு பிறகு திடீரென்று கண்விழித்த கிறிஸ்டினா ரோஸி மம்மா என பேசியுள்ளாராம்.
இப்படி ஒரு சம்பவம் நிகழும் என எதிர்பார்க்கவே இல்லை என தெரிவித்துள்ள ரோஸியின் கணவர், இதுவரை அனுபவித்த துயரங்கள் அனைத்தும் நொடியில் மறைந்த உணர்வு எனவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
இத்தாலியில் சிகிச்சையில் இருந்த ரோஸி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆஸ்திரியாவிலேயே சிறப்பு சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இவரது சிகிச்சை செலவுகளுக்காக பொதுமக்களிடம் இருந்து இதுவரை 148,000 பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டுள்ளது.
தற்போது ரோஸி குணமடைந்து வருவதாகவும், அதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும், கணவர் தெரிவித்துள்ளார்.
பிரசவத்தின்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தம்பதியரின் மகள் பல மாதங்கள் மருத்துவமனையில் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.