பிரித்தானியாவில் பயங்கர வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள பெண்
பிரித்தானியப் பெண் ஒருவர் கண்களிலிருந்து இரத்தம் வடிய வைக்கக்கூடிய ஒருவகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
மத்திய ஆசியாவுக்குப் பயணித்த அந்தப் பெண்ணுக்கு Crimean-Congo haemorrhagic fever என்னும் நோய் தாக்கியுள்ளது.
இந்த நோய் ஒரு வகை உன்னிப்பூச்சிகளால் பரவும் வைரஸ் நோயாகும். 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரித்தானியாவில் இந்த நோய் கண்டுபிடிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
இந்த நோயைப் பரப்பும் hyalomma tick என்னும் உன்னிப்பூச்சி, வட ஆப்பிரிக்கா, மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு பூச்சியாகும்,
அந்தப் பெண்ணுக்கு லண்டனிலுள்ள Royal Free Hospital எனும் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
இந்த நோய் மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவுவதில்லை என்பதால் பாதிக்கப்பட்டவரால் மற்றவர்களுக்கு அபாயம் இல்லை. ஆனால், இந்நோயால் பாதிக்கப்படுவோரில் 30 சதவிகிதத்தினர் உயிரிழந்துவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தாக்கியோருக்கு திடீரென காய்ச்சல், தசை வலி, தலை சுற்றல், குழப்பம் ஏற்படுவதுடன், கண்கள் மற்றும் தோலிலிருந்து இரத்தமும் வடியும் என்பது குறிப்பிடத்தக்கது.