ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட பெண்! சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி!
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் ஒரு நபர் வேண்டுமென்றே ஒரு பெண்ணை ரயில் வரும் நேரம் பார்த்து தண்டவாளத்தில் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியம் தலைநகரான Brussels-ல் ரோஜியர் மெட்ரோ நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த சிலிர்க்கவைக்கும் இந்த சம்பவத்தின் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
நல்லவேளையாக குறைந்த வேகத்தில் வந்த அந்த ரயில், அதிலிருந்து ஓட்டுனர் அவசரகால பிரேக்கை இழுத்ததால், அப்பெண்ணின் மீது ஏறாமல் மிக நெருக்கமாக வந்து நிறுத்தப்பட்டது, இதனால் அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் காயமின்றி உயிர் தப்பினார்.
இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த வீடியோ காட்சியில், ரயிலின் முன் அந்த பெண்ணை தள்ளுவதற்கு முன், அந்த நபர் பிளாட்பாரத்தில் ஓய்வில்லாமல் நடந்து செல்வதைக் காட்டுகிறது.
பின்னர் ரயில் வரும்நேரம் பார்த்து அவர் முன்னோக்கி வேகமாக ஓடிவந்து அந்த பெண்ணை மெட்ரோ ரயில் பாதையில் தள்ளிவிடுவது தெளிவாக பதிவாகியுள்ளது.
இரயில் நின்ற பிறகு அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணுக்கு உதவி செய்தனர்.
(⚠️Vidéo choc)
— Infos Bruxelles🇧🇪 (@Bruxelles_City) January 14, 2022
Tentative de meurtre dans la station de métro Rogier à Bruxelles ce vendredi vers 19h40. pic.twitter.com/dT0ag5qEFu
இந்த சம்பவத்தன்போது ரயில் ஓட்டுனரும் கடும் அதிர்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டார். அதனால், தள்ளிவிடப்பட்ட பெண் மற்றும் மெட்ரோ டிரைவர் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று விரைவில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், அந்த பெண்ணை தள்ளிவிட்டு குற்றவாளி உடனடியாக ஓடிவிட்டார். ஆனால், அவர் விரைவில் மற்றொரு மெட்ரோ ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும், கொலை முயற்சிக்கு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் பிரஸ்ஸல்ஸின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் நோக்கங்களை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, அவரது உடல்நிலையை சரிபார்க்க மனநல மருத்துவரும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.