கர்ப்பமாக இருப்பதை அறியாமல் இருந்த பெண்! காலையில் தூங்கி எழுந்ததும் திடீரென பிறந்த குழந்தை... தலைசுற்றவைக்கும் சம்பவம்
பின்லாந்தை சேர்ந்த இளம் பெண்ணொருவர் தான் கர்ப்பமாக இருப்பதை அறியாத நிலையில் வயிற்று வலி ஏற்பட்ட அடுத்த 8 நிமிடங்களில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
டில்டா கண்டலா என்ற பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காலையில் தூங்கி எழுந்தார் டில்டா.
அப்போது அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது, இரவு சாப்பிட்ட உணவுகள் ஒத்து கொள்ளாததால் வயிற்று வலி ஏற்பட்டதாக டில்டா நினைத்தார்.
ஆனால் அடுத்த 8 நிமிடங்களில் யாருமே நம்ப முடியாத ஒரு விடயம் அரங்கேறியது. அதாவது வயிற்று வலியால் அவதிப்பட்ட டில்டா திடீரென அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இது குறித்து டில்டா கூறுகையில், சத்தியமாக நான் கர்ப்பமாக இருக்கிறேன் என எனக்கு தெரியாது. வயிற்று வலி ஏற்பட்ட போது சாப்பிட்ட உணவு ஒத்து கொள்ளாததால் வலி ஏற்பட்டதாக நினைத்தேன். ஆனால் ஏற்கனவே இரண்டாண்டுகளுக்கு முன்னர் பிரசவத்தின் போது ஏற்பட்ட வலியை போலவே அந்த வலியும் இருந்தது.
நான் திணறுவதை பார்த்த என் தாயார், நீ கர்ப்பமாக இருக்கிறாயா? என கேட்க, தெரியவில்லை அம்மா, அப்படி தான் நினைக்கிறேன் என கூறினேன். அடுத்த சில நிமிடங்களில் எனக்கு குழந்தை பிறந்தது, இது எனக்கு குழப்பத்தையும், பயத்தையும் கொடுத்தது.
பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றோம். தற்போது நானும் என் குழந்தையும் நலமாக உள்ளோம்.
ஏற்கனவே ஒரு குழந்தையை தனித்து வளர்க்கும் தாயாக இருந்தேன், இப்போது இரண்டாவது குழந்தையையும் தனியாக வளர்க்கும் தாயாக உள்ளேன் என கூறியுள்ளார்.