ஆறாவது திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் ஏழாவது திருமணம்! பட்டுசேலையில் ஜொலித்த மோசடி பெண்
ஏழாவது திருமணத்திற்கு மணமேடைக்கு வந்த மோசடி கல்யாண ராணி.
ஆறாவது கணவரின் புத்திசாலித்தனத்தால் பொலிசில் சிக்கினார்.
தமிழகத்தில் ஆறாவது திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் ஏழாவது திருமணம் செய்ய வந்த பெண் குறித்த தலைசுற்றவைக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனபால் (35) என்பவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் நடந்தது. திருமணத்தை, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற தரகர் ஏற்பாடு செய்திருந்தார்.
திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில், பெண்ணின் அக்கா, மாமா ஆகிய இருவர் மட்டும் வந்துள்ளனர். அவர்களும், புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு, 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கிச்சென்றனர். தனபால், சந்தியாவுடன் புது வாழ்க்கையை துவங்கினார்.
இந்நிலையில், 9ம் திகதி காலை, தனபால் எழுந்து பார்த்த போது, சந்தியாவை காணவில்லை. பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானது தெரிய வந்தது.
இதுகுறித்து, தனபால் பொலிஸ் புகாரளித்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தபோது சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. அதைப்பார்த்த தனபால், தன்னை ஏமாற்றியவர்களை வளைக்க திட்டமிட்டார்.
இதையடுத்து, தரகரிடம் உறவினர்கள் மூலம், வேறு நபருக்கு திருமணம் செய்ய பேசி உள்ளார். போட்டோக்களை மட்டும் பார்த்து, போனிலேயே திருமணம் நிச்சயம் செய்து, நேற்று காலை, திருச்செங்கோட்டில் திருமணம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மணப்பெண் சந்தியா, தரகர், அவரது உறவினர் அய்யப்பன் ஆகியோர் திருச்செங்கோடு வந்தனர். அங்கு வந்த போது, கணவர் தனபால், அவரது உறவினர்கள் இருப்பதைக் கண்டு சந்தியா அதிர்ச்சி அடைந்தார். சந்தியாவையும், அவருடன் வந்தவர்களையும் பிடித்து, பொலிசில் தனபால் உறவினர்கள் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சந்தியாவுக்கு தனபாலுடன் சேர்த்து, இதுவரை ஆறு பேருடன் திருமணம் நடந்தது தெரிய வந்தது. சந்தியா, அவரது கூட்டாளிகள், யாரையாவது திருமணம் செய்து, இரண்டு நாட்கள் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு, கிடைத்ததையும், புரோக்கர் கமிஷனையும் பெற்று கம்பி நீட்டுவதை தொழிலாக கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மொத்த கும்பலையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.