மகளிர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
Women's Asia Cup Semi Final 2 SLW Beats PAKW: மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆசியக் கோப்பை அரையிறுதிப் போட்டி
வெள்ளிக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் குவித்தது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷவால் சுல்பிகர்(Shawaal Zulfiqar) 24 ஓட்டங்களையும், கேப்டன் பாத்திமா சனா(Fatima Sana) 47 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் 6.2 ஓவர்கள் முடிவிலேயே வெறும் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் 5 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா 36 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களையும் குவித்து அணிக்காக இணைந்து 71 ஓட்டங்களை குவித்தனர்.
ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா முக்கியமான 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார்.
இதனால் கடைசி 3 ஓவர்களுக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்ட இக்கட்டான நிலை ஏற்பட்டது.

அப்போது பொறுப்புடன் விளையாடிய நிலக்ஷிகா சில்வா 13 ஓட்டங்களையும், கௌஷினி நுத்யங்கனா 14 ஓட்டங்களையும் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில் இலங்கை 18.4 ஓவர்கள் முடிவிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் இலங்கை
அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதை அடுத்து இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை வீழ்த்தி தங்களது 8 வது ஆசிய கோப்பை கனவை அடைய இந்தியா முனைப்புடன் காத்திருக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |