தன்னை விட மூத்த ஆணைக் காதலிப்பதாக நம்பவைக்கப்படும் பெண்கள்: ஜேர்மனியில் நிகழும் ஒரு பயங்கரம்...
ஜேர்மனியில் 15 வயது சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரையிலானவர்களைக் குறிவைத்து ஒரு பயங்கரம் நிகழ்வதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு, பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுவது ஜேர்மனியில் அதிகரித்துள்ளது.
முதலில் ஒரு ஆண் தன்னைவிட மிகவும் வயது குறைவான பெண்ணிடம் பழகி, அவளைத் தான் காதலிப்பதாக நம்பவைக்கிறார். பின்னர் உணர்ச்சி ரீதியாக அவளை துஷ்பிரயோகம் செய்து பாலியல் தொழிலுக்குள் தள்ளுகிறார். அத்துடன் முடிவதில்லை, அந்த பெண் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தையும் ஏமாற்றி மோசடிசெய்கிறார்.
இந்த வகையில்தான் ஜேர்மனியில் சிறுமியர் முதல் இளம்பெண்கள் வரை பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார்களாம்.
2021ஆம் ஆண்டில் மட்டும், ஜேர்மனி முழுவதிலுமாக, பொலிசாரும் சுங்கத்துறையினரும் இதுபோன்ற சுமார் 510 கடத்தல் வழக்குகளை சந்தித்துள்ளார்கள். கவலைக்குரிய விடயம் என்னெவென்றால், முந்தைய ஆண்டை விட இந்த எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகம்!
இப்படி கடத்தப்படும் வழக்குகளில், சிறுவர் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது மேலும் அதிகரித்துள்ளதாக பெடரல் கிரிமினல் பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், குறைந்தது 237 சிறுவர் சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இப்படி கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டுள்ள 427 பேரில் 93 சதவிகிதத்தினரும் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஜேர்மானியர்கள் என்றாலும், புலம்பெயர்ந்தோரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.