பிரான்ஸ், பிரித்தானியாவை அடுத்து... ஈரான் விவகாரத்தில் ட்ரம்பை கைவிட்ட கனடா
ஈரான் போர் தொடர்பில் தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, ட்ரம்பின் கோரிக்கையை கனடா நிராகரித்துள்ளது.
பங்கேற்கும் நோக்கம் இல்லை
அமெரிக்காவுடன் இணைந்து எந்தவொரு தாக்குதல் இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்கும் நோக்கம் இல்லை என்றும் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை அடுத்து ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.
இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன், அமெரிக்காவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு அமெரிக்க இராணுவம் பாதுகாப்பளிக்கும் என அறிவித்திருந்த ட்ரம்ப், அது ஆபத்தில் முடியும் என்பதை உணர்ந்து பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியைக் கோரினார்.
ஆனால், அதில் இருக்கும் சிக்கலை உணர்ந்துள்ள நாடுகள் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் தமக்கு உதவாத நாடுகளுக்கு மிக மோசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கனடாவும் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. மட்டுமின்றி, ஈரான் தொடர்பான மோதலைத் தணிப்பதும் பொதுமக்களைப் பாதுகாப்பதுமே கனடாவின் முன்னுரிமை என்றும் வெளிவிவகார அமைச்சர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
பிராந்தியத்தில் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்குள்ள நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஆனந்த் துருக்கிக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், ஈரான் விவகாரத்தில் கனடாவிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும், எந்த விதமான இராணுவ நடவடிக்கையிலும் கனடா பங்கேற்காது என்றும், மேலும் ஈரான் மீதான தாக்குதல் இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்கும் நோக்கமும் கனடாவிற்கு இல்லை என்றும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவின் வெளிவிவகாரக் கொள்கையானது, பதற்றத்தைத் தணித்தல், பொதுமக்களைப் பாதுகாத்தல் மற்றும் பொதுவாக மனிதாபிமானம் பேணுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகும் என்றார்.
முதன்மை முன்னுரிமை
பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதே தலையாய முன்னுரிமை என்பதில் துருக்கியும் கனடாவும் உடன்பட்டுள்ளனர். போர் தொடங்கியதிலிருந்து, ஈரானிலிருந்து துருக்கியின் வான்வெளியை நோக்கி ஏவப்பட்ட மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை நேட்டோ வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்துள்ளன.
இந்த நடவடிக்கை, துருக்கியப் பிரதேசத்தில் கூடுதலாக ஒரு பேட்ரியாட் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை நிலைநிறுத்துமாறு கூட்டணியைக் கட்டாயப்படுத்தியது.

இதனிடையே, ஈரான் விவகாரத்தில் தலையிடாமல் விலகி இருப்பதே துருக்கியின் முதன்மை முன்னுரிமை என்றும், இந்த கட்டத்தில் இராணுவ ரீதியான பதிலடியை துருக்கி நிராகரிப்பதாகவும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஹக்கன் ஃபிடான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் காரணமாக லெபனானில் அதிகரித்து வரும் வன்முறையின் கடுமையான விளைவுகள் குறித்து எச்சரித்து, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |