ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் சீரழிக்கப்படுகிறது: பாப்பரசர் லியோ கடும் தாக்கு
கேமரூன் பயணத்தின் போது, போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை விமர்சித்த போப் லியோ, ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் சீரழிக்கப்பட்டு வருவதாக கடுமையாகத் தாக்கியுள்ளார்.
சுயலாபத்திற்காக
கொடிய கிளர்ச்சியால் பேரழிவுக்குள்ளான ஒரு பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாப்பரசர் லியோ, தங்கள் சுயலாபத்திற்காகக் கடவுளின் பெயரையே திரித்துவிட்டதாகக் கூறியவர்களைக் கடுமையாகச் சாடினார்.

பாப்பரசரைக் கடுமையாகத் தாக்கி நீண்ட பதிவை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஏற்பட்ட பெரும் வாக்குவாதத்திற்குச் சில நாட்களுக்குப் பிறகு அவர் இந்தக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போரை மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர் பாப்பரசர் லியோ. போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹார்முஸ் நீரிணையைத் திறக்கவும் வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் இணங்காவிட்டால், ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல் குறித்து பப்பரசர் தனது கடுமையான பதிலைப் பதிவு செய்திருந்தார்.
அமெரிக்காவில் பிறந்த முதல் போப்பாக கடந்த வருடம் பொறுப்பேற்ற லியோ, முன்னதாக ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கை அணுகுமுறையையும் கேள்விக்குள்ளாக்கியிருந்தார்.
அப்போது தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ஒரு பாப்பரசராக மட்டும் லியோ செயற்பட்டால் போதும் என குறிப்பிட்டிருந்தார்.
போர் வெறியர்கள்
ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போப், ட்ரம்ப்புடன் எந்த விவாதத்திலும் ஈடுபட விரும்பவில்லை என்றும், ஆனால் அமைதியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.
கேமரூனில் உரையாற்றிய பாப்பரசர் லியோ, கொலைகளுக்கும் பேரழிவுகளுக்கும் பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படுகின்றன என்ற உண்மையைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்தார்.

அழிப்பதற்கு ஒரு கணம் போதும், ஆனால் மீண்டும் கட்டமைப்பதற்குப் பல நேரங்களில் ஒரு வாழ்நாளே போதாது என்பதையும், போர் வெறியர்கள் அறியாதது போல் பாவனை செய்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
ஈரானில் நடக்கும் போர், பாப்பரசருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே முரண்பாடுகளை அதிகளவில் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |