உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல்
ஏமன் நாட்டில், கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், அவரது தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ள விடயம் அனைவரும் அறிந்ததே.
ஆனால், தன் சகோதரர் உயிருக்கு பதிலாக கொலை செய்தவரின் உயிர்தான் வேண்டும் என கொல்லப்பட்டவரின் சகோதரர் வலியுறுத்திவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கேரள செவிலியர் வழக்கு
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா (34), 2008ஆம் ஆண்டு, ஏமன் நாட்டில் செவியர் வேலைக்கு சேர்ந்தார்.
2017ஆம் ஆண்டு, ஏமன் நாட்டவரான மஹ்தி (Talal Abdo Madhi) என்பவரைக் கொலை செய்து விட்டு தப்ப முயன்றதாக நிமிஷா ஏமன் எல்லையில் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, இந்திய அரசு மற்றும் செல்வாக்கு மிக்க இஸ்லாம் மதத் தலைவர் ஒருவரது முயற்சியால் நிமிஷாவின் தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்
இந்நிலையில், தன் சகோதரைக் கொன்ற நிமிஷா கொல்லப்படவேண்டும் என மஹ்தியின் சகோதரரான அப்தெல் (Abdel Fattah Mahdi) வலியுறுத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஷரியா சட்டப்படி, தவறுதலாக ஒருவரைக் கொன்ற நபரிடம் இரத்தப்பணம் என்னும் பணத்தை வாங்கிவிட்டு அவரை மன்னிக்கலாமாம். அது திய்யா (Diyya) என அழைக்கப்படுகிறது.
ஆனால், திட்டமிட்டு, வேண்டுமென்றே ஒருவரைக் கொன்றவருக்கு மன்னிப்பு கிடையாது. அவருக்கு, பதிலுக்கு பதில்தான் செய்யவேண்டும், அதாவது பழிக்குப் பழி வாங்கவேண்டுமாம். அது கிஸாஸ் (Qisas) என அழைக்கப்படுகிறது.
ஆக, நிமிஷா தன் சகோதரரை திட்டமிட்டு, வேண்டுமென்றேதான் கொலை செய்தார். ஆகவே, உயிருக்கு பதிலாக உயிர்தான் வேண்டும் என அப்தெல் கூறியுள்ளாராம்.
இன்னொரு பக்கம், மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தும் மதத் தலைவரான முஸ்லியாரை எதிர்க்கும் சிலர், நிலைமையை மோசமாகி வருகிறார்கள்.
அதாவது, சமூக ஊடகங்களில் எதிர்மறையான செய்திகளைப் பரப்பிவரும் அவர்கள், இரத்தப்பணம் வாங்குவது மஹ்தி குடும்பத்தின் நற்பெயரைக் கெடுப்பதாக அமையும் என்றும், கொல்லப்பட்ட மஹ்தியின் கௌரவத்துக்கு அது இழுக்கு என்றும் விமர்சனம் முன்வைத்துவருகிறார்களாம்.
அது மஹ்தி குடும்பத்தினரின் சுயமரியாதையை தூண்டுவதாக அமைந்துள்ளதால், அவர்கள் பழிக்குப் பழிவாங்கவே விரும்புவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |