ஜெலென்ஸ்கி விடுத்த எச்சரிக்கை... உக்ரைன் தலைநகரை சுற்றிவளைத்து தாக்கிய ரஷ்யா
ரஷ்யா இரவோடு இரவாக மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டு வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்த சில மணி நேரங்களில், வியாழக்கிழமை அதிகாலை கீவ் நகரில் தொடர்ச்சியான சக்திவாய்ந்த தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.
பெரும் தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதாகவும், இதனால் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து தீப்பிடித்ததில் குறைந்தது ஒருவர் மரணமடைந்ததாகவும் கீவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யத் தாக்குதல்களைத் தொடர்ந்து குறைந்தது பதினொரு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் இடிந்து விழுந்த ஒன்பது மாடிக் கட்டிடத்திற்குள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பொருட்டு மீட்புக் குழுவினர் விரைந்து கொண்டிருந்ததாக கிளிட்ச்கோ கூறியுள்ளார்.
முன்னதாக ஆம்புலன்ஸ் துணை நிலையம் ஒன்று தாக்கப்பட்டதில் மருத்துவப் பணியாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சில காலமாக உக்ரைன் மீது ஒரு பெரும் தாக்குதலைத் திட்டமிட்டு வருகிறார் என்று புதன்கிழமை அன்று எச்சரித்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, மக்கள் மிகவும் கவனமாக இருக்கவும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகளுக்குச் செவிசாய்க்கவும் கேட்டுக்கொண்டார்.

முடிவுக்குக் கொண்டுவர
இந்த நிலையில், சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஜெலென்ஸ்கி, இன்று இரவு நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் சரியாக அதுதான் என்றார். உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் ஒலிக்கத் தொடங்கிய எச்சரிக்கை சைரன்களுக்கு மத்தியில், நீண்டதொரு இரவை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில், சில குடியிருப்பாளர்கள் தஞ்சம் புகுவதற்காக மெட்ரோ நிலையங்களில் திரண்டனர்.

கடந்த மாதம், உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்தது. எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களை, போரை முடிவுக்குக் கொண்டுவர மாஸ்கோவைக் கட்டாயப்படுத்துவதற்கான ஒரு முக்கிய உத்தி என்று ஜெலென்ஸ்கி விவரித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் ஒரே இரவில், 12 பிராந்தியங்களில் 660 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷ்யா அறிவித்தது; 2022-ல் ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |