போரை யார் தொடங்கியது? எப்படி முடிப்பது? இங்கே வந்து பார்த்து கூறுங்கள்: கொந்தளித்த உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
ரஷ்யா ஏற்படுத்தியுள்ள சேதத்தை நேரில் வந்து பார்த்த பிறகு யோசனை கூறுங்கள் என எலான் மஸ்க்கிற்கு உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ்
உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் இணைய முனையங்களை வழங்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம் அதற்காக ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
ஆனால் ஸ்டார்லிங்க் டெலிவரி செலவுகளை அமெரிக்க அரசு எடுத்துக் கொள்ளுமாறு ஸ்பேஸ் எக்ஸ் கேட்டுக் கொண்டதும், கட்டணத்தை தொடர்ந்து செலுத்த தயாராக இருப்பதாக கூறியதில் இருந்து மஸ்க் பின் வாங்கியதும், ஜெலென்ஸ்கியுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
@JIM WATSON/GETTY IMAGES
உக்ரைனுக்கு அழைப்பு
இந்த நிலையில், சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் யோசனை ஒன்றை கூறினார். அதாவது, உக்ரைனில் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் பொது வாக்கெடுப்பு நடந்த வேண்டும் என அவர் கூறினார்.
இது ஜெலென்ஸ்கிக்கு மேலும் மஸ்க் மீது அதிருப்தியை அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து, நியூயார்க் டைம்ஸின் Dealbook உச்சி மாநாட்டில் பேசிய ஜெலென்ஸ்கி, 'நான் எப்போதும் மிகவும் வெளிப்படையாக தான் பேசுகிறேன். ரஷ்யா இங்கே என்ன செய்துள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால், உக்ரைனுக்கு வாருங்கள்.
இதை உங்கள் கண்களால் பார்ப்பீர்கள். அதன் பிறகு இந்தப் போரை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது, யார் அதை ஆரம்பித்தார்கள், எப்போது முடிக்க முடியும் என்பதை நீங்கள் எங்களுக்கு கூறுங்கள்' என காட்டமாக மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெலென்ஸ்கியின் இந்த அழைப்பு குறித்து மஸ்க் உடனடியாக் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
உக்ரேனிய ராணுவம் சமீபத்தில் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட உக்ரைனின் சில பகுதிகளை மீட்பதில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக கெர்சனை கைப்பற்றியது மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.