திருமண வரதட்சணையாக 100 அரிய வகை பூனைகள்! தங்கக் கட்டிகள், வைர நகைகள்..இணையத்தில் வைரல்
வியட்நாமில் இளம்பெண்ணுருவருக்கு திருமண வரதட்சணையாக, 100 சிவேட் பூனைக்குட்டிகளை பெற்றோர் அளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆடம்பர வரதட்சணை
ஆசிய நாடான வியட்நாமில் மணமகள் எதிர்கால வருமானத்தை ஈட்டுவதற்கு, அவரது பெற்றோர் பொன், பொருள் அளிப்பது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அப்போது அவரது பெற்றோர் 100 அரிய வகை சிவேட் பூனைக்குட்டிகளை (Civet Cats) திருமண பரிசாக அளித்தனர்.
அவை அனைத்தும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. இவற்றின் மொத்த மதிப்பு 1.8 பில்லியன் வியட்நாமிய டாங் (70,000 டொலர்கள்) ஆகும். இந்த வகை பூனைகள் வியட்நாம் நாட்டில் ஒரு மதிப்புமிக்க சொத்தாக பார்க்கப்படுகின்றன.
ஏனெனில், உலகின் மிகவும் விலையுயர்ந்த காபிகளில் ஒன்றாகக் கருதப்படும் Kopi Luwak காபியை உற்பத்தி செய்வதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதாவது, பழுத்த காபி செர்ரிகளை சாப்பிடும் பூனைகள், அவற்றை கழிவாக வெளியேற்றும். பின்னர் அவை சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தி Kopi Luwak காபி தயாரிக்கப்படுகிறது.
அதேபோல், சிவேட் பூனைகளின் இறைச்சி சீனா மற்றும் வியட்நாமில் ஒரு ஆடம்பர உணவாகவும் பார்க்கப்படுவதுடன், சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
500 மில்லியன் டாங் ரொக்கம்
மணமகளுக்கு 500 மில்லியன் டாங் ரொக்கம், வைர நகைகள் மற்றும் 25 தங்கக்கட்டிகள், 300 மில்லியன் டாங் மதிப்புள்ள நிறுவனப் பங்குகள், சொத்துக்கள் போன்றவற்றையும் அவரின் பெற்றோர் வழங்கியுள்ளனர்.
மேலும், அவரது மாமியார்கள் இந்திய மதிப்பில் ரூ.6.5 லட்சம் ரொக்கம், 10 தங்கக் கட்டிகள் மற்றும் வைர நகைகளை அளித்துள்ளனர்.
இதுதான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பலரும் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர்.
எனினும் மணமகளின் தந்தையான ஹாங், "என் மகள் வணிக பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர். இந்த சொத்துக்களை நிர்வகிக்க அவள் முழுமையான திறமையானவர். எந்த முறையாக இருந்தாலும், அது அவளுடைய நிதி சுதந்திரத்தை உறுதி செய்கிறது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |