தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி
சிரியாவில் இரண்டு நாட்களாக நடந்த உள்நாட்டு கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு கிளர்ச்சி
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் (Syria) முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகள் அவருக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி படைகளை தூண்டிவிட்டன.
புதிதாக உருவான கிளர்ச்சிப்படை தலைநகர் டமாஸ்கஸ் உட்பட முக்கிய நகரங்களைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து, பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சமடைய, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதியாக கிளர்ச்சிப்படையைச் சேர்ந்த அஹ்மத் அல்-ஷரா பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் அரசு படையினருக்கும், ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
1000க்கும் மேற்பட்டோர்
பல கிராமங்களில் புகுந்த அரசு படையினர் தாக்குதல் நடத்த, ஆதரவு ஆயுதப்படை பதிலடி கொடுத்தது.
கடந்த இரண்டு நாட்களாக நடந்த உள்நாட்டு கலவரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதில் 125 பேர் சிரிய அரசுப் படையைச் சேர்ந்தவர்கள் என்றும், 148 பேர் ஆசாத் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பலியான ஏனைய நபர்கள் பொதுமக்கள் என்றும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், துப்பாக்கி ஏந்தியவர்களில் வெளிநாட்டு போராளிகள் மற்றும் அண்டை கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த போராளிகள் அடங்குவதாக மற்ற குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
அவர்களில் பெண்ணொருவர், "இது மிகவும் மோசமானது" என்றும், "தெருக்களில் உடல்கள் கிடந்தன" என்றார்.
உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷ்யா ஈடுபட்டு வருவதனால் சிரிய அரசுக்கு அதனால் உதவ முடியவில்லை என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |