பொலிசார் வெறிச்செயல்... துப்பாக்கி குண்டுக்கு பலியான பலர்: ஐநா மனித உரிமை ஆணையம் கண்டனம்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் 18 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
மியான்மர் ராணுவம் இந்த போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது பல்வேறு இடங்களில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 18 பேர் வரை பலியானதாக ஐநா மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது.
யங்கூன், தாவெய், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன. இச்சம்பவங்களில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மரில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேபோல் மியான்மர் மக்களுக்கான சர்வதேச நாடுகளின் ஆதரவும் தொடர்ந்து பெருகி வருகிறது.
இது மியான்மர் ராணுவத்துக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் ராணுவத்தினர் மேலும் ஆக்ரோஷத்துடன் போராட்டத்தை ஒடுக்க தொடங்கியுள்ளனர்.
ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு ஆளும் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்பட 800-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


