Red Alert..,174 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை: எச்சரிக்கும் உலக வானிலை அமைப்பு
வரும் 2024 -ம் ஆண்டில் காலநிலை பிரச்னைகள் மோசமடையும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக நாடுகளின் மீது காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அளவுக்கதிகமான மழை, பெருவெள்ளம், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகம் ஆகியவற்றிற்கு காலநிலை மாற்றமே காரணம் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
காலநிலை மாற்றம்: கடந்தாண்டுகளில் உலக நாடுகள் இதுவரை சந்திக்காத பிரச்சனையை சந்தித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் கூறி வருகிறது.
இந்நிலையில், வரும் 2024 -ம் ஆண்டில் காலநிலை பிரச்னைகள் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது என்று உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக வானிலை அமைப்பின் தலைவர் கூறுகையில், "கடலின் வெப்பம் அதிகரிப்பு, பனிப்பாறைகள் உருகுவது ஆகியவை மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
இந்தாண்டுக்கான உலகளாவிய காலநிலை அறிக்கையை ஐநாவின் உலக வானிலை அமைப்பு நேற்று வெளியிட்டது.
எச்சரிக்கை
அதில், "கடந்த 174 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சராசரி வெப்பநிலை எட்டியுள்ளது. தொழில்புரட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 1.45 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடலின் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
ஆண்டு முழுவதும் 90% கடல்பகுதி வெப்ப அலையால் பாதிக்கப்படுவதால் உணவு கட்டமைப்பு பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
உலக வானிலை அமைப்பின் செலஸ்டி சாலோ கூறுகையில், "உலகத்திற்கு உலக வானிலை அமைப்பு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. கடந்த 2023 -ம் ஆண்டில் எதிர்கொண்ட கடல் வெப்பம், பனிப்பாறை உருகுவது, அண்டார்டிகாவில் கடல் பனி உருகுவது போன்றவர் கவலைக்குரிய விடயம்.
இதற்கு வளிமண்டலத்தை விட அதிக நேரம் வெப்பத்தை வைத்திருக்கும் நீரின் பண்புகளே காரணம்" என்று கூறியுள்ளார்.