ஆப்கானிஸ்தானிற்கு உதவிக்கரம் நீட்டிய முக்கிய உலக நாடுகள்: பலி எண்ணிக்கை 1000 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட மிகப் பயங்கர நிலநடுக்கத்தால் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் தென் கொரியா சுமார் 1 மில்லியன் டொலர்கள் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் நேற்று அதிகாலை உணரப்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மாகணத்தின் பெரும்பாலான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சரிந்து விழுந்தது. இதில் 1000 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்ததுடன் 1500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ள இந்த பயங்கர நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து 160 கிலோமீட்டர் தென்கிழக்கு தொலைவில் பாகிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள சிறிய குடியிருப்புகள் நிறைந்த வறண்ட மலைகளில் அதிகமாக உணரப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் மற்றும் அவரச சேவைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான தென் கொரியா, ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் விதமாக சுமார் 1 மில்லியன் டொலர்களை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: அமெரிக்காவில் ரயிலில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் மரணம், மற்றோருவர் காயம்
இதுத் தொடர்பாக தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ள தகவலில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும் நோக்கில், தென் கொரியா சுமார் 1 மில்லியன் டொலர்கள் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
தென் கொரியாவை போல ஜப்பானும் ஆப்கானிஸ்தானிற்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.